Thursday, March 31, 2011

பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடித்தாக ஆதாரம் இல்லை கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ


கன்னியாகுமரி : பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கன்னியாகுமரியில் வைகோ கூறினார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சி நேற்று மாலை கன்னியாகுமரியில் நடந்தது. நேற்று மாலை அண்ணாதுரை சிலை முன்பு இருந்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன், இலங்கை கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. வைகோ அஸ்தி கலசத்தை எடுத்து வர ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவியபடி வந்தனர். முக்கடல் சங்கமத்தில் பழ நெடுமாறன் தலைமையில் வைகோ அஸ்தியை கரைத்தார்.

பின்னர் கடற்கரையில் நடந்த அமைதி கூட்டத்தில் வைகோ பேசியதாவது;- உலகின் புகழ் பெற்ற கன்னியாகுமரி கடற்கரையின் கடல் அலையின் ஓசை இதே கடலின் மறு பக்கமான வெல்வெட்டி துறையில் எதிரொலிக்கும். உலகில் இதுவரை கண்டிராத ஆயுத போராட்டத்தை நடத்தியவர் பிரபாகரன். அவரது தாயார் பார்வதியம்மாள் சாம்பலை 31ம் நாளான கடந்த 22ம் தேதி மெரினா கடலில் தூவினோம். சிங்கள ராணுவம் பார்வதியம்மாள் இறுதி காலத்தில் கூட நிம்மதியாக சாக விடாமல் அலை கழித்து அந்த துயரத்தில் இறந்து போனார். சிதையில் கூட சிங்கள ராணுவம் மூன்று நாய்களை சுட்டு கொன்று அந்த பிணத்தை வீசியது. இதைவிட தமிழனுக்கு என்ன அவமானம் வேண்டும். இலங்கை போரில் கடைபிடிக்க வேண்டிய ஜெனிவா ஒப்பந்தத்தை கூட ராணுவம் கடைபிடிக்கவில்லை. ஆனால் பிரபாகரன் கடைபிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறனுக்கு ஈழ தமிழர் ஒருவர் விக்லிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலை தெரிவித்தார் . இதில் சிங்கள ராணுவம் பிரபாகரனை பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது. ராஜபட்ஷே போர்குற்றவாளிஎன அறிவிக்க சர்வதேச கோர்ட்டில் வாதாடுவோம். இதற்காக போரடுவோம். பொதுமக்களை ஒன்று திரட்டுவோம். தமிழ்ஈழ போராட்டம் விரைவில் துவங்கும். இதற்காக லட்சகணக்கான இளைஞர்கள் கடல் தாண்டி செல்லும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை சாராத இளைஞர்கள், மாணவர்களை ஒன்று திரட்டுவோம். இவ்வாறு வைகோ கூறினார்.

 நிகழ்ச்சியில் ம.தி.மு.க, கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில்சம்பத், அவைதலைவர் துரைசாமி, கணேசமூர்த்தி எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் துரைபாலகிருஷ்ணன், மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜோயல், தில்லைசெல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினராஜ், கலிங்கப்பட்டி பஞ்., தலைவர் ரவிசந்திரன் உள்ளிட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ம.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

நன்றி: தினமலர்

Wednesday, March 30, 2011

நல்லது, புதிதாகத் தொடங்குங்கள் வைகோ அவர்களே!


வைகோவின் அரசியல் தற்கொலை,

தேர்தலில் தன்மானம் முக்கியமல்ல, சீட்தான் முக்கியம், சேராத இடத்தில் சேர்ந்த வைகோவுக்கு இது தேவைதான்,

திமுகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார் வைகோ, அதனால்தான் இந்த புறக்கணிப்பு,

இல்லையில்லை, ஜெயலலிதாவும் வைகோவும் பேசி வைத்துக் கொண்டுதான் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்….

- அப்பப்பா… ஆளுக்கொரு கணிப்புகள். அரசியல் படிக்க, பேசத் தெரிந்த எல்லோருமே வைகோ மீது தாங்களே ஒரு தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அவரது தேர்தல் புறக்கணிப்பு முடிவு தொடர்பாக!
உண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம் இது. வாழ்த்துகள்!

இவரைப் போன்ற ஒருவர்தான் இன்றைய தேவை.

நாணயம், யோக்கியம் போன்றவற்றுக்கு அர்த்தமே தெரியாத இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் பெரும் தலைவர்களுக்கு மத்தியில் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற தனது கொள்கைகளை, பல்வேறு ஏளனம், கேலிகளைத் தாண்டி இன்னமும் வலுவாகப் பற்றிக் கொண்டிரு்பபவர் வைகோ, இடையில் சில தடுமாற்றங்களுக்கு ஆளானாலும்.

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியே தீர வேண்டும். அதுதான் வளர்ச்சி அரசியல் என்று புதுப்புது இலக்கணங்கள் படைக்கும் பச்சோந்திகளைப் பார்த்தே பழகிய வாக்காளர் கண்களுக்கு, தன்மானம் முக்கியம், தொகுதிகளுக்காக தரமிழந்து கையேந்த முடியாது என சிலிர்த்துக் கொண்டு நிற்கும் வைகோ ஒரு ஆச்சர்யமாக, அல்லது பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியாகத்தான் தெரிவார். அது வைகோவின் தவறல்ல!
ஆனால் அவரை ஆரம்பமுதலே பார்க்கும் நமக்கு அப்படித் தெரியவில்லை. இத்தனைக் காலமும் சுற்றியிருப்பவர்களின் பதவி ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி, கட்சியைக் காப்பாற்றக் கருதி… சில குறைந்தபட்ச சமரசங்களோடு கூட்டணி கண்டு வந்தார் வைகோ என்பதுதான் உண்மை.

ஆனால் அப்படி பதவி ஆசைக்காக அவரை நச்சரித்து வந்த கூட்டம் இப்போது எதிர் முகாமில், வாங்கிய கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள். வைகோவுக்கு இனி இழக்க எதுவுமில்லை. ஆனால் பெறுவதற்கு ‘தமிழகம்’ இருக்கிறது. இப்போது அவர் எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கலாம். அதற்கு இப்போது அவருக்குக் கிடைத்துள்ள சுயமரியாதை மற்றும் யோக்கியர் என்ற இமேஜ் பெருமளவு உதவும்.

இன்றைய தேதிக்கு திமுக – அதிமுக கூட்டணிகளின் சந்தர்ப்பவாதங்கள், சர்வாதிகார்ப் போக்குகள் மற்றும் ஊழல்களைப் பார்த்து வெறுத்துப் போன பெரிய இளைஞர் கூட்டத்துக்கு லேசான நம்பிக்கைக் கீற்று வைகோ மூலம் தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் மிகையல்ல.

இந்த இளைஞர்களை மதிமுகவின் தொண்டர் பலமாக மாற்றிக் கொள்வதுதான், வைகோவின் அடுத்த கட்ட இலக்காக இருக்க வேண்டும். அதுவே, மதிமுக என்ற மாற்று அரசியல் சக்தியை நிலைநிறுத்த உதவும். நல்ல படிப்பாளி, நிர்வாகம் தெரிந்தவர், தொண்டர்களிடம் ஆளுமை மிக்க தலைவர், உண்மையான இன உணர்வாளர் என இத்தனை சிறப்புகள் இருந்தும் இவரால் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க முடியாமல் போனது தமிழக வாக்காளர்களின் துரதிருஷ்டம்.

இந்த நேரத்தில் அவருக்கு ஒரு முக்கிய கோரிக்கையையும் தமிழக மக்கள் சார்பில் வைக்கலாம். ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் மனிதாபிமானி என்ற பெயரைப் பெற்ற வைகோ, இனி இங்குள்ள பிரச்சினைகளிலும் முழுவீச்சில் களமிறங்க வேண்டும்.

அடுத்த தேர்தலில் போட்டியிடுகிற அணிகளுள் வைகோவின் தலைமையிலான மதிமுக அணியும் ஒன்று என்ற நிலைக்கு அவர் இப்போதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமே, அதிமுக கூட்டணியிலிருந்து அவர் விலகி நிற்பது. தாமதம் என்றாலும், இது சரியான முடிவுதான்.

இந்தத் தேர்தலில் எடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட கள ஆய்வு முடிவுகள் சில, வைகோவைப் பிரிந்த அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்திக்கப் போகிறது என்று கூறுகின்றன. தேர்தல் களத்துக்கு வெளியில் நின்றாலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற சக்தியாகத் திகழ்கிறார் வைகோ என்பதற்கு இதுவே சான்று. இதுதான் வைகோவை பெரும் சக்தியாக மாற்ற உதவும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை… ஆனால் ஆளுங்கட்சியாகும்போது ‘ராசியான நிறங்கள்’ மட்டுமே வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதானால்தான் இத்தனை நாள் அவருக்கு கவசமாகத் தெரிந்த வைகோவின் ஈழ ஆதரவுக் குரல், இப்போது கசக்கிறது.

அரசியல் களத்தில் வைகோவை வீழ்த்துவதையே தனது கடமையாகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது திமுக. ஜெயலலிதாவும் இதில் கருமமே கண்ணாக இருக்கிறார். பணத்தை வாரி இறைத்தேனும் அவரை விருதுநகரில் தோற்கடிக்கிறது காங்கிரஸ்.

வைகோவைத் தோற்கடிக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட பெரும் ஆலைகளின் முதலாளிகள் பல கோடிகளை வாரியிறைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால், இவர்களின் கொள்ளைகளுக்கு வைகோ எந்த அளவு இடையூறாக இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!

ஆக, அவர் நாடாளுமன்றத்துக்கோ, சட்டமன்றத்துக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பத் தெளிவாக உள்ளார்கள். காரணம் வைகோவின் கேள்விகள் தங்களை நோக்கிப் பாயும் என்ற பயம். நேர்மையாளனைப் பார்த்து பயப்படுபவர்கள் யாராக இருப்பார்கள்… பரம அயோக்கியர்கள்தானே!

நல்லது, புதிய தொடக்கத்துக்கு வாழ்த்துக்கள் வைகோ அவர்களே!

நன்றி: -வினோ, என்வழி இணையதளம்

பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்; பரிசுத்தமானதை பாவிக்குக் கொடாதேயுங்கள்

மார்ச் 02, 2011
நாஞ்சில் சம்பத் ( ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலாளர் )


ஏப்ரல் திங்களில் தமிழகம் சட்டமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
நாட்டு மக்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் காவுகேட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்து தன்னையும் பல்கி பெருக்கிக் கிடக்கும் தனது குடும்பதையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு அபூர்வப் பிறவி ஆறாவது முறையாகவும் அன்னைத் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர, அதற்கான அடிப்படை வேலைகளில் ஆளும் தரப்பினர் இப்போதே ஈடுபடத் துவங்கியுள்ளனர். கொள்ளையடித்துக் குவித்து வைத்திக்கிற கோடிப் பணங்களைக் கொட்டிச் செலவழித்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டைத் தன் குடும்பத்தின் வேட்டைக்காடாகத் துடிக்கிற சுயநலச் சுனாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும். வரும் தேர்தலில் குலத் துரோகம் செய்கிற இந்தக் குடும்பத்தை தமிழக வாக்காளர்கள் ஓரங்கட்டாவிட்டால் தமிழகம் சாரம் இழக்கும். சத்தியிழக்கும் வருங்காலச் சந்ததி வாழ்விழக்கும் தமிழ்க் குடும்பங்கள் தத்தளிக்கும் தடுமாறும். ஒரு குடும்பம் ஓகோ என்றிருக்கும். ஆகா நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நாளெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியது வரும். கவலைப்பட வேண்டியது வரும்.

அதிகாரத்திற்கு வருகிறவர்களுக்கு அந்த நாளில் அண்ணல் காந்தியடிகள் சொன்ன அறிவுரையை இந்த நாளில் நினைவு படுத்துவோம். ‘ஏழ்மையை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை மறவாமல் செயற்படுங்கள்‘ நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் ஒரு அரசாங்கம் இயங்குகிறது என்பதை அண்ணா அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையில் தெளிவுபடுத்தினார். “முழுவயிறு காணாதார் முதுகெலும்பு முறிய பாடுபடுவோர், வாழ்வின் சுவைகாணார், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர் - இவரெல்லாம் தருகின்ற வரிப்பணம்தான் கோட்டையாக் கொடிமரமாய் பாதையாய் பகட்டுகளாய் அமல் நடத்தும் அதிகாரிகளாய் அறிவு பெற அமையும் கூட்டங்களாய் அமைகின்றன” என்றார் அறிஞர் அண்ணா. அண்ணல் காந்தியடிகளின் அறிவுரையும், அறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும் இன்றைய ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு இருந்தால் நாடு நாடாக இருந்திருக்கும். காடாக மாறியிருக்காது கவலை மிகுந்திருக்காது.

வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள். அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து. யாரை மனதில் வைத்து இப்படி எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் ஆதாயச் சூதாடிகளால் இன்று அரசியல் வியாபாரம் ஆகி விட்டது. விதியற்றவர்களாய், கதியற்றவர்களாய் மக்கள். இந்த மதோன்மத்தர்களின் கோரப்பிடியில் இருந்து நாட்டை மீட்க வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை ஏந்த மக்கள் அணியமாக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

ஒரு கிண்ணத்தில் மட்டுமே அமுதம் நிரம்பி வழிகிறது. ஒரு தோட்டத்தில் மட்டுமே தென்றல் காற்று திரும்பத்திரும்ப வீசுகிறது. ஒரு நத்தவனத்தில் மட்டுமே மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. ஒரு கருணை இல்லாத குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் மந்தகாசப் புன்னகையில் மல்லாந்து கிடக்கிறது.

ஒரு குடும்ப ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எதிராக குவலயத்தில் அங்கிங்கெனாதபடி புரட்சிகள் சூல்கொண்டு வருகின்றன. நைல் நதிக்கரையில். நாகரீகத்தின் தொட்டில் பூமியில், பிரமிடுகளின் தேசத்தில், அய்யாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னால் ரோம சாம்ராஜ்யத்திற்கு தானியங்கள் வழங்கிய வளமார்ந்த பூமியில் நாசரின் எகிப்தில் முப்பது ஆண்டுகாலம் எகிப்து மக்களை ஏய்த்து, ஏமாற்றி, உண்டு கொழுத்து, உல்லாசம் அனுபவித்து, ஊரெல்லாம் வளைத்துப்போட்ட ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் வெசுவியஸ் எரிமலையாய் வெடிக்கிறார்கள் ஊடகத்தில் ஹோஸ்னி முபாரக்கின் அத்துமீறலை அம்பலப்படுத்திய காலித் சையத் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டான்.

காலித் சையத்தின் மரணம் எகிப்து மக்களின் நெஞ்சத்தில் ரணத்தை உருவாக்கியது. அது போர்குணமாக உருவெடுத்தது புகழ்பெற்ற தாரீர் சதுக்கத்தில் இருபது லட்சம் மக்கள் பதினெட்டு நாட்கள் திரண்டார்கள். நாயே நாட்டைவிட்டு வெளியேறு என்று திசையதிர மூரி முழங்கினார்கள். மக்களின் உள்ளத்தில் பொங்கியெழுந்த கோபத்திற்கு ஈடு கொடுக்க முடியாத ஹோஸ்னி முபாரக் குடும்பத்தோடு கெய்ரோவில் இருந்து வெளியேறி விட்டான். எகிப்தில் நின்று நிலவிய ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. மக்களின் விழாவிற்கு விடை கிடைத்தது.

எகிப்தில் புரட்சி வெடித்ததற்கும் ஹோஸ்னி முபாரக் வெளியேறியதற்கும் டுனீசியாவில் ஏற்பட்ட புரட்சி தான் காரணமாக அமைந்தது. 72 வயது நிரம்பிய டுனீசியாவின் அதிபர் பெண் அலியின் ஆட்சியில் டுனீசியாவில் நொந்தார்கள். நொறுங்கிப் போனார்கள். மக்கள் அதலபாதாளத்தில் தூக்கி வீசப்பட்டார்கள். பெண் அலியின் குடும்பமோ ஆகாயத்தையே வசமாக்கிவிட்டது. டுனீசியாவிலும் புரட்சி பூத்தது. புதுமை சிலிர்த்தது. கொற்றத்தில் இருந்த கொடியவன் பெண் அலிக்கு எதிராக முகமதுவுவாசி என்ற இளைஞன் தற்கொ¬லை செய்து மாண்டான். அந்த இளைஞனின் சாவுதான் பெண் அலியின் ஆட்சியைக் காவு கேட்டது. டுனீசியாவில் இருந்து பெண் அலியும் வெளியேறி விட்டான் குடும்பத்துடன்.

பனாமாவில் இப்போது சலேவிற்கு எதிராக புரட்சி வெடித்து விட்டது. சலேவும் தாக்குப்பிடிக்க மாட்டான். அவன் ஆட்சியும் தரைமட்டமாகிவிடும் என்ற செய்திகள் காதில் தோனாய்ப் பாய்கிறது.

விடுதலை உணர்ச்சிக்கு வித்தூன்றிய மாமனிதன் உமர் முக்தார் உலவிய லிபியாவிலும் மக்கள் கிளர்ச்சிக் கொழுந்து விட்டு எரிகிறது. கடாபிக்கு எதிராக மக்கள் களத்திற்கு வந்து விட்டார்கள். லிபியாவின் தலைநகர் டிரிபோலி போர்க்களமாக விட்டது. கடாபிக்கு எதிராக மக்கள் செங்குருதி சிந்த சித்தமாகி விட்டார்கள். பெங்காசி நகரம் புரட்சியாளர்கள் வசமாகி விட்டது. பொது மக்கள் காங்கிரஸ் எனும் லிபியாவின் பார்லிமெண்ட் தீக்கரையாக்கப்பட்டு விட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்கள் தீயில் தீர்ந்து கொண்டிருக்கின்றன. பெங்காசி விமானப் படைத்தளத்தைப் புரட்சியார்கள் உடைத்து நொறுக்கி விட்டார்கள். தலைநகர் டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் புரட்சியாளர்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டது. சிட்ரோ, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல்ஜாவியா, ஜவாரா போன்ற இடங்களில் எல்லாம் கலகக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். புரட்சியாளர்கள் மீதும் தாயகத்து மண்மீதும் கொடுங்கோலன் இராஜபட்சேயைப் போல ஏவுகணைத் தாக்குதலுக்கு இராணுவத்தை ஏவி விட்ட பிறகும் புரட்சித் தீ எல்லாத் திசைக்கும் பரவுவதாக செய்திகள் வருகிறது. முட்டாள் கடாபியும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஐ.நாவின் மனித உரிமைப்பிரிவின் தலைவன் நவிபிள்ளை கடாபியின் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்கிற அளவிற்குக் கடாபியின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டது.

மத்திய கிழக்கில் வளம் நிறைந்த பக்ரைனிலும் புரட்சி பூத்துக் கிடக்கிறது. பக்ரைன் தலைநகர் மனாமாவின் ‘பேர்ள்’ சதுக்கத்தில் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னராட்சிக்கு எதிராக மண்ணும் விண்ணும் அதிர அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மன்னராட்சி காலூன்றி இருக்கிற அரபுச் சீமையில் மக்கள் புரட்சி வெல்லுமானால் மக்களாட்சித் தத்துவம் மலர்குலுங்கும் மண்ணில் புரட்சி வெடிக்க அதிக நேரமாகாது. அதற்கான தருணம்தான் வருகிற பொதுத் தேர்தல் இந்தத் தேர்தலின் முடிவில் மாறுதலும் சாத்தியாகும். மக்களுக்கு ஆறுதலும் சாத்தியமாகும்.

தொலை நோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு வளமான எதிர்காலத்திற்கு வழி காணாமல் நிகழ்காலத்தின் கதவடைக்கிற கருணாநிதியின் காலம் தமிழக வரலாற்றில் கசப்பான காலம் களப்பிரர் காலத்தைத் தான் நினைவு படுத்துகிறது. நெஞ்சு சுடுகிறது.

மக்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல் மீனைக் கொடுத்து மக்களை ஏய்க்கிற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை ஏய்க்கவும் ஏமாற்றவும் திட்டமிடுகிறார்கள். மலைவாசியும் தொட முடியாத தூரத்தில் விலைவாசி. இதை நீ யோசி என்று சொன்னால் மக்களுக்கு வாங்கும் சக்தி வந்து விட்டது என்று முதலமைச்சர் பிலாக்கணம் பாடுகிறார். தன்மக்களைச் சொல்கிறாரா? தமிழ்நாட்டு மக்களைச் சொல்லுகிறாரா? என்பது தான் தெரியவில்லை.

ஜனநாயக பண்புக்குப் பந்தி வைக்க குடவோலை முறைகண்ட பழந்தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியில் ஜனநாயகம் கட்சியிலும் ஆட்சியிலும் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. கட்சியின் பொருளாளர், துணைமுதல்வர் என்னும் இடத்திற்கு ஸ்டாலினைக் கொண்டு வந்த பிறகும் இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கக் கருணாநிதிக்கும் மனமில்லை. ஸ்டாலினுக்கும் குணமில்லை. தடாலடி அரசியல் நடத்துகிற கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார். என்பதை விட வேறு எந்த எந்தத் தகுதியும் இல்லாத அழகிரியை மத்திய மந்திரியாக்கிய அவலத்தை எங்கேபோய் சொல்வது அறிஞர் அண்ணாவும் அவர்தம்பி வைகோவும் அலங்கரித்த மாநிலங்களவையில் கனிமொழியை உட்கார வைத்ததன் மூலம் மாநிலங்கள் அவையே அழுக்காகிவிட்டது. கருணாநிதி குடும்பத்தைச் சார்ந்த ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரமையங்கள் தமிழகத்தைக் கயிறு போட்டுத்தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு மலிவான, மலினமான, கீழ்த்தரமான, கேவலமான, கோரமான குடும்ப ஆட்சியைக் குவலயத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. இவர்களை இன்னும் ஏன் இந்த மண்ணில் ஆள அனுமதிக்க வேண்டும் என்கிற கேள்வி தமிழக வாக்களார் மத்தியில் இன்று எழுந்து விட்டது. உண்மையைக்கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிவிடாமல் ஊரெல்லாம் மக்கள் சீறியெழத் தொடங்கிவிட்டார்கள். அச்சமும் பேழமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்ட ஊமை ஜனங்கள் தான் தமிழ் நாட்டு மக்கள் எனக் கருணாநிதி கணக்கிடுவாரேயானால் கருணாநிதியின் கணக்கை முடிக்க மக்கள் கணின்று எழுந்த விட்டார்கள் என்பதை போகப் போகப் புரிந்து கொள்வார்கள் ஆட்சியாளர்கள்.

ஒளி மிகுந்த தமிழகத்தை இருட்டில் தள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் குறுதொழிலுக்குக் கொள்ளி வைத்த ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி. வீட்டுக்கு ஒரு குடிகாரணை உற்பத்திசெய்து தாயின் கையில் 1 ரூபாய்க்கு அரிசியையும் தகப்பன் கையில் ரூ.100/- சாராயத்தையும் கொடுத்தது சாதனையா? வேதனையா?

பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருந்து ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரையே அவர் வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லுகிறார்கள் என்றால் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் இந்த நீசனின் ஆட்சியில் தாக்கப்படுகிறார்கள் என்றால் ஆழ்வார்க்குறிச்சியில் பட்டப்பகலில் மந்திரிகள் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள் என்றால் காலையில் பட்டாம் பூச்சி போல் பள்ளிக்குப் பறந்து சென்ற குழந்தை மாலையில் வீடு திரும்புவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றால் இந்தியாவில் இதைவிட இழிவான கேடு கெட்ட ஆட்சி வேறெங்கும் இல்லை.

ஆளப்படுகிற மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் வசந்தம் கோலம்போட வேண்டும் என்றால் ஆளுகிறவன் ஏழையாக இருக்க வேண்டும். இங்கே ஆளப்படுகிற இலவசத்திற்குக் காத்திருக்கிற யாசகர்கள் ஆளுகிறவர்கள் என்ஜினியர்கள் கல்லூரி தாளாளர்கள். மேலாளர் நாகரிகம் நிலவிய நாட்டில் இப்போது தாளாளர் நாகரிகம் தலைதூக்கி விட்டது.

இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய எஜமானியின் காலில் விழுந்து கிடக்கும் இந்த அடிமைக் கூட்டத்தை, அலைவரிசையில் தன் கைவரிசையைக் காட்டி தேசப்பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தான மனிதர்களை, பட்டப்பகலையே பட்டாபோடும் இந்த பகல் கொள்ளையர்களை, வலிக்காமலேயே ரத்தம் உறிஞ்சுகிற இந்த நவீனரக ஓட்டுண்ணிகளை, பண்பாட்டு அடித்தளத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடுத்திருக்கிற குலக்கேடர்களை வேரோடும் தூரோடும் வெட்டிச் சாய்க்கிற வேள்வியில் வெற்றி பெற்றால் தான் நாடு நாடாக இருக்கும்.

ஜனநாயக தேவதையின் துகிலுரிந்த இந்த நவீன துச்சாதனர்களின் இருந்து, 1,01,541/- கோடிக்கடன் வாங்கி நிர்வாகத்தை நிர்வாணமாக்கிய விவேகம் கெட்டவர்களிடம் இருந்து, தீர்ந்து போகாத திராவிட இயக்க இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் கொள்கைத் துரோகிகளிடம் இருந்து, வாரிசு அரசியல் என்னும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட மரபார்ந்த தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கு தமிழர்களே தயாராகுங்கள். தாமதித்தால் எதுவும் நேராமலும் போகலாம். நல்ல நேரமிது நழுவ விடாதீர்கள்.

நன்றி: தினமலர் மார்ச் 02, 2011

ம.தி.மு.க., குளத்தில் கல்லெறிந்தவர்கள்


நான் 1996ல் ரஜினியை அவரது வீட்டில் போய் சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசினேன். அப்போது நான் ஏன், தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்டேன் என்றும் சொன்னேன். "நீங்கள் கட்சி துவக்குவதாக இருந்தால் துவக்குங்கள். நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். உங்கள் பெயரை சொல்லி, உங்கள் மன்றத்தின் பெயரை சொல்லிக்கொண்டு பலனை யாரோ சுரண்டிக்கொண்டு போவதற்கு அனுமதிக்காதீர்கள்' என்றும் சொன்னேன்.

"நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். ஒரு வாரத்தில் அமெரிக்கா போகிறேன்' என, ரஜினி சொன்னார். தேர்தலில் கம்யூனிஸ்ட்டுடனும், ஜனதா தளத்துடனும் கூட்டணி அமைத்து போட்டியில் குதித்தோம். தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு இணையாக ம.தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது.

திடீரென மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவக்கி தி.மு.க.,வுடன் கூட்டு வைத்ததாலும், அருமை நண்பர் ரஜினிகாந்த், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி விமான நிலையத்தில், "அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது' என ஜெ., ஆட்சி குறித்து பேட்டி கொடுத்ததும், ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

தேர்தலில் தி.மு.க., - த.மா.க., கூட்டணி வெற்றி பெற்றது. மூப்பனார் புதிய கட்சி துவங்காமல் இருந்திருந்தால், ரஜினி பேட்டி கொடுக்காமல் இருந்திருந்தால், அந்த தேர்தலில் ம.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றிருக்கும்.

அது குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில், "மிகப்பெரிய வெள்ளத்தில், சில சந்தன மரங்களும் அடித்து செல்லப்படலாம். ம.தி.மு.க., என்ற இந்த சந்தன மரம், வளர்ந்தாலும், வெட்டப்பட்டாலும் மக்களுக்கு பயன் தந்துகொண்டே தான் இருக்கும்.

-ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ "டிவி' பேட்டியில்

தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி..

நாடு சுற்றும் நாஞ்சில் சம்பத் கணிப்பு!

''இந்தத் தேர்தலில் நாங்கள் கண்ணீரை விதைத்து இருக்கிறோம். 'கண்ணீரை விதைத்தவர்கள் கம்பீரமாக அறுவடை செய்வார்கள்’ என்பார்கள். வானம் அழுதது... மழை பிறந்தது. சிப்பி அழுதது... முத்து பிறந்தது. மலர் அழுதது... தேன் பிறந்தது. வைகோவின் வாஞ்சை மிகுந்த சகாக்களாகிய நாங்கள் அழுகிறோம்... சீக்கிரமே வெற்றி பிறக்கும்!'' - வலியையும் வலிமையையும் ஒருசேரச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.

 ''பேட்டி...'' என்றதும், ''மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நிற்கிறேன். வர முடியுமா?'' எனக் கேட்டார். தேர்தல் களத்தில் வைகோவின் வலது கரமாகச் சுற்றிச் சுழலவேண்டியவர், கடற்கரையில் காற்று வாங்க நிற்பது காலம் செய்த கொடுவினை!

மனதில் தோன்றியதைப் பகிர்தலாகச் சொன்னபோது, ''கொடுவினை செய்தது காலம் அல்ல... கூட்டணித் தலைமை! இத்தனை ஆண்டு காலம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தோமே... அந்த நேர்மைக்குக் கிடைத்த நெருக்கடி. சமயம் பார்த்துக் கிடைக்கிற இடத்தில் துண்டுபோடவும், யாரையும் துண்டு போடவும் தெரியாத எங்களின் சாலச்சிறந்த தலைவனுக்கு அரசியல் அற்பர்கள் கொடுத்த பரிசு!
ஆனாலும், கல்லூரிக் காலத்தில் இருந்து என் தலைவனுக்கு ஆட்பட்டவனாகச் சொல்கிறேன். வைகோ இப்போது அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் இப்போது அனுபவிக்கும் குதூகலத்தை இதுவரை நான் கண்டது இல்லை. உத்வேகமான உற்சாகம் அவரிடம் கொப்பளிக்கிறது. புதிய சமவெளிக்கு - பூலோக சொர்க்கத்துக்கு வந்ததுபோல், எங்கள் தலைவர் எழுச்சி பெற்று இருக்கிறார். எத்தகைய இக்கட்டுகளையும் ஒரு நொடியில் இறக்கிவைத்து புத்தெழுச்சி பெற, தாயின் தலைமாடு போதும் என் தலைவனுக்கு!'' என்கிறார் சம்பத்!

''அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலக வேண்டிய கட்டாயத்தின் உண்மையான பின்னணி என்ன?''
''கடந்த தேர்தலில் இருந்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் எங்களை முதல் ஆளாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடாதபோதே, எங்களுக்குள் சிறு சந்தேகம் எழுந்தது. 'வைகோவைக் கூட்டணியில் வைத்திருக்காதீர்கள்’ என்பது கடல் கடந்து வந்த கட்டளை என்றே தோன்றுகிறது. அதேபோல், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தலைவர் வைகோ நடத்தும் சட்டப் போராட்டமும் பலரை சங்கடத்தில் ஆழ்த்தியது. ஸ்டெர்லைட் நிறுவனர் அகர்வால், தலைவர் வைகோவிடம் பல விதங்களிலும் சமாதானத்துக்கு மெனக்கிட்டார். தலைவர் எந்த விமானத்தில் செல்கிறார் என்பதை அறிந்து பக்கத்து ஸீட்டில் பய​ணித்து, 'ஐந்து நிமிடங்கள் உங்​களோடு பேச வாய்ப்புக் கொடுங்​கள்!’ எனக் கெஞ்சினார். ஆனாலும், அந்த நச்சு ஆலையை மூடும் முடிவில் கொஞ்சமும் பின்வாங்காத தலைவர், அதற்கு மறுத்துவிட்டார். சிங்கள அதிபர் ராஜபக்ஷே, 'ஸ்டெர்லைட்’ அகர்வால் உள்ளிட்ட இன்னும் சில பண முதலைகள் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிப்பதை உடைக்கத் துடித்தன. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என நாங்களும், எங்கள் தலைவரும் நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கையை அம்மையார் தவிடுபொடியாக்கிவிட்டார்!

எங்களைக் கூட்டணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே 6 தொகுதிகள் ஒதுக்குவதாகப் பேச்சுவார்த்​தையை ஆரம்பித்தார்கள். எங்கள் தகுதிக்கும் தகவுக்குமான ஒதுக்கீடா அது? கூட்டணியில் இருந்து எங்களைத் தலையைப் பிடித்துத் தள்ளவே அவர் நினைத்தார். மொத்தத்தில், 'ஜெயலலிதா பணத்துக்கு அடிமை. தலைவர் வைகோ குணத்துக்கு அடிமை’ என்பதை இந்தத் தேர்தல் களம் உலகுக்குத் தெரிவித்துவிட்டது!''

''திட்டமிட்டு ம.தி.மு.க-வை விரட்டிய ஜெ., பிறகு ஏன் வைகோ-வுக்கு கடிதம் எழுத வேண்டும்?''
''அந்தக் கடிதத்திலேயே அவர் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இறுதியில் அவர் எங்களுக்கு ஒதுக்க நினைத்தது வெறும் 12 ஸீட்கள்தான். தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி ஜெயலலிதா அந்தக் கடிதத்​தில் ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. 'வை​கோ மீது நன்மதிப்பும் அன்பும் எப்போதும் உண்டு!’ என அம்மையார் எழுதியது, நாடு முழுக்க அவருக்கு எதிராக எழுந்த உணர்வுபூர்வமான கொந்தளிப்பை அடக்க எடுத்த ஆயுதம்! ஆனால், அம்மையாரின் கடிதத்தால் அடங்கிவிடக்கூடிய ஆதங்கமா அது? எரிமலையாக வெடித்துச் சிதறும் எங்களின் அடிபட்ட வலி, அவர்கள் அடிபடும்போதுதான் புரியும்!''

''கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே தள்ளப்பட்​டதற்குக் காரணம் சசிகலாவின் உறவு வகையறாக்கள்தான் என்கிற பேச்சும் இருக்கிறதே?''
''ஜெயலலிதா அம்மையார் தன்னிச்சையாகவோ, சுதந்திரமாகவோ, எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். அதை நம்புவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை!''

''அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விஜயகாந்த்​தோ, இடது​சாரித் தலைவர்களோ கூட்டணி​யில் ம.தி.மு.க-வை நிலைக்கவைக்க முயற்சி எடுக்கவில்​லையா?''
''அவர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அ.தி.மு.க. தலைவியைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் சந்திக்கவோ, கருத்துச் சொல்லவோ முடியாது என்பதுதான். உயரிய பத்திரி​கைகளே அவரிடம் நேரம் வாங்க முடியாமல் அல்லாடுகின்றன. கூட்டணியில் ம.தி.மு.க. நிலைக்க வேண்டும் என யார் நினைத்து இருந்தாலும், இரும்புத் திரை போர்த்திய அந்தத் தலைவியிடம் எப்படிப் பேச முடியும்? அதனால், இதில் யார் மீதும் எங்களுக்கு வருத்தம் இல்லை!''

''17 ஆண்டுகளாகக் களத்தில் இருக்கும் ம.தி.மு.க-வை அவமானப்படுத்தியது ஒரு புறம் இருக்கட்டும்... கடந்த தேர்தலின்போது கட்சி ஆரம்பித்த விஜயகாந்த்துக்கு 41 ஸீட்கள் ஒதுக்கியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''கொள்கை சார்ந்த அரசியலை எந்த ஆதிக்க சக்தியும் ஏற்பது இல்லை என்பதைத்தான் அம்மையாரின் முடிவு அப்பட்டமாக்குகிறது. லட்சியத்தை மையமாகக்கொண்டும், இளைஞர்களையே மூலதனமாகக்கொண்டும் இயங்கும் ம.தி.மு.க-வைப்போன்ற ஏதாவது ஓர் இயக்கத்தை இந்த இந்தியத் தேசத்தில் உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? இதைக் கொச்சைப்படுத்துவதில் சிலர் சுகம் காண்கிறார்கள். அந்த சுகம் நிரந்தரமானதாக இருக்காது!''

''வழக்கம்போல் வைகோ உணர்ச்சிவசப்பட்டுப் புறக்கணிப்பு முடிவு எடுத்துவிட்டதாக சிலர் சொல்​கிறார்களே?''
''19-ம் தேதி கட்சியின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி நண்பகல் 2 மணி வரை தலைவர் வைகோ ஆலோசித்தார். அதன் பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிகாலை 3.30 மணி வரை ஆலோசித்துத்தான் தேர்தல் புறக்கணிப்பு என்கிற முடிவை தலைவர் ஏகமனதாக எடுத்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டு இருந்தால், '6 ஸீட்தான்...’ என ஆரம்பித்தபோதே அறுத்துக்கொண்டு வந்திருக்கலாமே... எங்களின் மௌனத்தை இளக்காரம் செய்பவர்களை விட்டுத்தள்ளுங்கள். 1,000 பொதுக்கூட்டங்கள் நடத்தினால்கூட கிடைக்காத எழுச்சியை எங்களின் மௌனம் இப்போது ஏற்படுத்தி இருக்கிறது.''

''தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்ததால், தி.மு.க-வை வீழ்த்துவதையே லட்சியமாகக்கொண்ட உங்களுக்குப் பின்னடைவுதானே?''
''கலைஞர் மறுபடியும் முதல்வர் ஆவதில் எங்களுக்கு இம்மியளவும் உடன்பாடோ, மகிழ்வோ இல்லை. ஆனால், ஜெயலலிதா இப்படிப் பழிவாங்கிவிட்டாரே என்கிற வேதனை கடைக்கோடித் தொண்டர்கள் வரை நீடிக்கிறது. யாரை வீழ்த்த வேண்டும், யாருக்கு நம் வல்லமையைப் புரியவைக்க வேண்டும், யாரைக் கருவறுக்க வேண்டும் என்பதெல்லாம் ம.தி.மு.க. உறுப்பினர்களின் மனசாட்சிக்கே தெரியும்! இந்தத் தேர்தலில் நிச்சயம் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் முடிவுகளில்தான் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரியும். இதுவரை தமிழகத்தில் நிகழாத தொங்கு சட்டமன்றம்தான் இந்தத் தேர்தலில் அமையும். அதன் ஆயுள் மிகக் குறைவானதாக இருக்கும். பீகாரைப்போல் மிகக் குறைந்த காலத்துக்குள்ளேயே அடுத்த தேர்தலை தமிழகம் எதிர்கொள்ளும். அப்போது மாற்று சக்தியாக ம.தி.மு.க. வல்லமையோடு களத்தில் நிற்கும்!''

''முதல்வர் கருணாநிதி, 'வரிப் புலியே வருக’ என வைகோ-வை சூசகமாக அழைத்திருக்கிறாரே?''
''கலைஞரின் பாச வலையில் வைகோ ஒரு போதும் சிக்க மாட்டார். எங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டும், தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் எடுத்த முடிவும் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஒரு கௌரவத்தை எங்களுக்கு உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அனுதாபத்தையும், பொதுமக்களிடத்தில் பச்சாதாபத்தையும், உலகத் தமிழர்கள் மத்தியில் உயரிய நன்மதிப்பையும் உண்டாக்கி இருக்கிறது. இதை அறுவடை செய்ய அவர்கள் முயலத்தான் செய்வார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் பலிக்காது. இது நாள் வரை நாங்கள் விதைத்தோம். ஆனால், அறுவடை செய்யவில்லை. நாங்கள் நெய்தோம். ஆனால், உடுத்தவில்லை. இனி அப்படி இருக்க மாட்டோம். நாங்கள் விதைத்தை நாங்களே அறுவடை செய்வோம். இதில் ஊடுருவ கலைஞர் நினைத்தாரேயானால், அந்த முயற்சியில் அவர் தோற்பது உறுதி. தான் கொள்ளையடித்து வைத்திருக்கும் சொத்துகள் பறிபோகப் போகிறதோ என்று பயப்படுகிறார் கலைஞர். அதனால், காவல்காரர்களைத் தேடுகிறார். அன்புக் கடிதம் எழுதியவர்களுக்கும், ஆசை அழைப்பு விடுப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது... இழவு வீட்டில் களவு கூடாது!''

- இரா.சரவணன், படங்கள்: கே.கார்த்திகேயன்

Tuesday, March 29, 2011

இரும்புத் திரைக்குள் மாட்டிக் கொண்டுபால்கனி அரசியல் நடத்தும் ஜெ.,!வெடிக்கிறார் நாஞ்சில் சம்பத்


வைகோவின் மனசாட்சி எனும் அளவுக்கு, அவருடன் நகமும் சதையுமாக இருப்பவர் சம்பத். 2006ல் தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., வெளியேறும் முன்னரே, தன் மேடை முழக்கங்கள் மூலம் அதை கட்டியம் கூறியவர். இம்முறையும், விரிசல்கள் வெளியில் தெரியும் முன்னரே, அ.தி.மு.க., தலைமையை தஞ்சைத் தரணியில் போட்டுத் தாக்கிவிட்டார். அவர் சொன்னது போலவே அமைந்தன முடிவுகள்.

அடுத்தது என்ன?இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்திருப்பது சரி தானா?
இது கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்ல... ம.தி.மு.க.,வினருக்கும் தவக்காலம் தான். ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணிக்கு, வைகோவின் தவம் கலையும். எங்கள் மவுனம் வலிமையானது. அமெரிக்காவின் சிகாகோ நகரில், மேதின நினைவரங்கில், "சப்தத்தை காட்டிலும் மவுனம் வன்மையானது' என்ற பொன்மொழி எழுதிவைக்கப்பட்டுள்ளது. மவுனம் வன்மையானது என்பதை, தமிழக தேர்தல் முடிவுகள் ஊருக்கு உணர்த்தும். ஆயிரம் கூட்டங்களில் பேசினாலும் வைகோவிற்கு கிடைத்திராத மரியாதை, தற்போதைய மவுனத்தால் ம.தி.மு.க., பெற்றிருக்கிறது.ஒரு புதிய திசையை நோக்கி எங்கள் பயணம் தொடர்வதற்கு, ஒரு வாசலை திறந்து வைத்த ஜெயலலிதாவை, வாசனை மலர்களைத் தூவி வணங்குகிறேன்.

ஜெயலலிதாவின் இந்த முடிவால் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எங்களுக்கு அனுதாபமும், தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எங்களுக்கு கவுரவமும், பொதுமக்கள் மத்தியில் எங்கள் மீது பட்சாதாபமும், உலகத் தமிழர்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் ஜார் மன்னனை வீழ்த்துகிற புரட்சிக்கு அடித்தளம் அமைத்த மாவீரன் லெனின், "முன்னே ‌செல்ல ஒரு காலடி தூரம் எடுத்து வைக்க இடம் கிடைத்தால் போதும்' என்றான். ம.தி.மு.க.,வின் 17 ஆண்டுகால பயணத்தில், எங்களுக்கு முன்னே செல்ல, இப்போது ஒரு அடி எடுத்து வைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும், பூகம்பத்தின் சீற்றத்தை விட அதிகமாகவும், புயலின் வேகத்தைவிட வேகமாகவும் எங்கள் பயணத்தை மேற்கொள்வோம். தமிழகத்தில் இதுவரையிலும் மாற்றுக் குறையாத சக்தியாக இருந்த நாங்கள், இனி மாற்று சக்தியாக மாறுவோம். "அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நான் தான் மாற்று அணி' எனக் கூறிவந்த கேப்டன், இப்போது சிப்பாய் ஆகி சீரழிகிறார்.ஒருவேளை அ.தி.மு.க., அதிகாரத்திற்கு வருமானால் ஜெயலலிதா, தி.மு.க.,வை எல்லா தளங்களிலும் தீர்த்துக் கட்டுவார். தி.மு.க., ஆட்சிக்கு வருமானால், அ.தி.மு.க.,விற்கு முடிவுரை எழுதுவர். இந்தத் தேர்தல் முடிவில், இரண்டு தீயசக்திகளில் ஏதாவது ஒரு தீயசக்தி அழியப் போகிறது என்பது மட்டும் உண்மை. ஒரு சக்தி அழியும் போது, இட்டுநிரப்புகிற அரசியல் ஆளுமையும், அதற்கான ஆற்றலும், தமிழக அரசியலில் வைகோவிற்கு மட்டும் தான் உண்டு.

தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஜாதிக்கட்சிகளை நம்பித்தான் களத்தில் நிற்கின்றனர். தமிழக அரசியலில் எங்கள் வியர்வை, அடுத்தவர்களின் பாசனத்திற்கு பயன்பட்டிருக்கிறது. நாங்கள் விதைத்தோம்; ஆனால் அறுக்கவில்லை. நாங்கள் நெய்தோம்; ஆனால் உடுத்தவில்லை. நாங்களே நெய்து நாங்களே உடுத்தவும்; நாங்களே விதைத்து நாங்களே அறுக்கவும், காலம் ஒரு சந்தர்ப்பத்தை வைகோவிற்கு வழங்கியிருக்கிறது.அ.தி.மு.க.,வில் நடப்பதை வைகோவால் எப்படி கணிக்க முடியாமல் போனது?ஜெயலலிதாவின் இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகத் தன்மையை, எங்களால் முன்கூட்டியே உணர முடியவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பேசிய அ.தி.மு.க., குழுவினர் ஆறு இடங்களைத் தான் தரமுடியும் என்றனர். வாதத்திற்கு கேட்பதானால், 1996 தேர்தலில் அ.தி.மு.க., நான்கு இடங்களில் தான் வெற்றி பெற்றது. எனவே, நீங்கள் நான்கு இடங்களை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூற முடியுமா?

தூத்துக்குடி தனியார் ஆலை நிர்வாகம் தான் ம.தி.மு.க.,வை கூட்டணியில் இருந்து கழற்றிவிட பல கோடிகள் தந்ததாக பேச்சு எழுகிறதே?
கப்பலோட்டிய தமிழன் வாழ்ந்த தூத்துக்குடியில், அபாயத்தை கக்குகிற ஸ்டெர்லைட் நச்சு ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் கசிவு ஏற்பட்டால், அதை சரி செய்ய தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவிலேயே இல்லை. அறிவியல் துறையில்முன்னேறிய ஜப்பான் நாடே அணுக்கசிவால் திக்குமுக்காடுகிறது. எனவே தான், அந்த ஆலைக்கு எதிராக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் சென்றோம். ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வைகோ நேரடியாக ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வரை ‌சென்று, அந்த ஆலையை இழுத்து மூட உத்தரவுகள் பெற்றோம்.

அந்த நாசகார கும்பலால் வைகோவை இழுக்கவும் முடியவில்லை; ஈர்க்கவும் முடியவில்லை. எனவே வைகோவின் குரல் சட்டசபையில் ஒலிக்க இருப்பதைத் தடுப்பதற்காக, அந்த நிறுவனத்தின் பணம் பல கோடி ரூபாய், போயஸ் தோட்டத்து சீமாட்டியிடம் சிக்கிக் கொண்டது. பணத்திற்கு அரசியல் செய்யாத, குணத்திற்கே அரசியல் செய்கிற வைகோ, திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார். "தொட்டான் பாஞ்சாலியை... கெட்டான் துரியோதனன்' என்பதைப் போல, "விட்டார் வைகோவை, கெட்டார் ஜெயலலிதா' என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

ம.தி.மு.க., மற்றும் வைகோ ஆதரவாளர்களின் ஓட்டு யாருக்கு என்பதை எப்போது சொல்வீர்கள்?
யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது, வைகோவின் ஆதரவாளர்களுக்குத் தெரியும். காங்கிரசுக்கு பதிலடி தர வேண்டும் என 63 தொகுதிகளில் களம் இறங்கினால், அங்கு ஓட்டுகள் சிதறி காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். தனியாக போட்டியிட்டால், யாரிடமாவது பெட்டி வாங்கி போட்டியிடுகின்றனர் என, பெட்டி வாங்கியே பழக்கப்பட்டவர்கள், எங்கள் மீது பழி öŒõல்லக்கூடும். நாங்கள் காசற்றவர்கள் மட்டுமல்ல... மாசற்றவர்கள். எனவே தான், ம.தி.மு.க.,விற்கு புதிய வலுவும், பொலிவும் களம் காணாமலேயே வசமாகியிருக்கிறது. வைகோ தமது முடிவை ஏப்ரல் 11ம் தேதி மாலையில் அறிவிப்பார்.

"புறக்கணிக்க வேண்டாம்' என இன்று குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க.,விற்கு உரிய சீட்டை வழங்கும்படி ஜெ.,விடம் பேசவில்லையே என்ற வருத்தம் உள்ளதா?
"நோ காம்ப்ரமைஸ்' என கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்கள், ஒரே நாளில் ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்ததை, இந்த நாடு பார்த்தது. எனவே தான், கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் விஷப் பரீட்சையில் வைகோ இறங்கவில்லை. எங்களை நாங்களே சுத்திகரித்துக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும், சுய பரிசோதனை செய்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்களது சீட்களுக்காக கம்யூனிஸ்ட்களாவது ஜெயலலிதாவிடம் பேசுவதாவது... இரும்புத் திரைக்குள் மாட்டிக்கொண்டு பால்கனி அரசியல் நடத்தும் அந்த அம்மையாரைச் சந்திப்பதும், கருத்து தெரிவிப்பதுவும் விஜயகாந்தோ, கம்யூனிஸ்ட் தலைவர்களோ அல்ல, ஐ.நா., சபை தலைவர் பான் கீ மூனால் கூட முடியாத விஷயம். அப்படியே கம்யூனிஸ்ட்கள் அந்த அம்மையாரிடம் கேட்டாலும் கூட, எதுவும் நடந்திருக்கப்போவதில்லை.

வைகோ குறித்து ஜெ., உருக்கமான அறிக்கை வெளியிட்டாரே?கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு முறையாக சீட் ஒதுக்கும் முன், 160 தொகுதிகளுக்கும் தான்தோன்றித்தனமாக வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்தபோதே எங்களுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டதை உணர்ந்தோம். ஜெயலலிதாவின் அறிக்கையில் வைகோவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இல்லையே. எனவே, இது திட்டமிட்டுத் தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். நாங்கள் கண்ணீர் வடிப்பதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், "கண்ணீரோடு விதைப்பவர்கள்; கம்பீரத்தோடு அறுவடை ‌செய்வர்' எனும் விவிலியத்தின் வரிகள், தேர்தல் முடிவுகளின் போது அம்மையாருக்கு உணர்த்தும். சிறைச்சாலை செல்வது மட்டுமல்ல தியாகம்.

இது போல அவமானங்களை தாங்கிக் கொள்வதும் தியாகம் தான். எங்களை அவமானப்படுத்திவிட்டதாக அவர்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அவர்களின் கணக்கை முடிக்கிற காலம் எங்களுக்கு வரும். வைகோ வெல்வது உறுதி... வரலாற்றுக்கு இல்லை மறதி. வைகோவின் விஸ்வரூபத்தை இனிமேல் தான் பார்க்கப் போகிறோம்.""கம்யூனிஸ்ட்கள், ஒரே நாளில் ஜெ.,விடம் சரணாகதி அடைந்ததை, இந்த நாடு பார்த்தது. எனவே தான், அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் விஷப்பரீட்‌சையில் வைகோ இறங்கவில்லை''

நன்றி: தினமலர்

அன்னை பார்வதியின் ஈமச்சாம்பல் குமரி கடலில் கரைப்பு! வைகோ, பழ.நெடுமாறன் பங்கேற்பு!


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் ஈமச்சாம்பலை கன்னியாகுமரி கடலில் கரைக்கும் நிகழ்ச்சி மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசின் கொடிய அடக்குமுறைக்கும், இனக்கொலைக்கும் ஆளாக்கப்பட்டு, அடிமை நுகத்தடியைச் சுமக்க நேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகத்தை, சுதந்திரத் தமிழ் ஈழ தேசமாக அமைத்திட, உலகமே அதிசயிக்கும் விதத்தில் விடுதலைப் போர் நடத்திய மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைப் பெற்ற அருமை அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார்.

வல்வெட்டித்துறையில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ள நமது அன்னையின் ஈமச்சாம்பலை, மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரி முனையில், கடல் அலைகளில் தூவி, நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, அன்னையார் மறைந்த 40ஆம் நாளாகிய மார்ச் 31 வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது. நானும், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கு ஏற்க இருக்கின்றோம்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப்பொதுச்செயலாளர்கள், நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளை, குமரி மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம் அவர்களும், கழக நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

கழகக் கண்மணிகளும், தமிழ் ஈழ ஆதரவாளர்களும் பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நன்றி: நக்கீரன்

Monday, March 28, 2011

‘‘யாரை வீழ்த்தவேண்டும் என்று ம.தி.மு.க.வினருக்கு தெரியும்!’’ - நாஞ்சில் சம்பத்



அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. கழட்டி விடப்பட்டதும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் ம.தி.மு.க. தொண்டர்கள். ‘‘இந்த முறை மட்டும் ம.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கிறது...’’ என்று சொல்லிவிட்டு வைகோ ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

இருந்தாலும், கொந்தளித்து எழும் ம.தி.மு.க. தொண்டர்கள், அ.தி.மு.க.வுக்கு எதிராக வார்த்தை வீச்சுக்களை ஆங்காங்கே நடத்திக் கொண்டி-ருக்-கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்-படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாண்டு காலமாக பட்டி தொட்டியெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்துதான், உச்ச-பட்ச கொந்த-ளிப்பில் இருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்...

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகி வருவதற்கு தொகுதி பங்கீடு பிரச்னைதான் பிரதான காரணமா?

நாங்கள் திட்டமிட்டு வெளியேற்றப் பட்டி-ருக்கி-றோம். இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. எங்களை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்கு கடல் கடந்து தீட்டப்பட்ட திட்டம் தான் பிரதான காரணம். அந்த திட்டத்தின் பலனாக பல ஆயிரம் கோடிகள் கைமாறி இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்-திருக்கிறது.

கேட்கவே பயங்கரமா இருக்கே... அப்படி என்னதான் திட்டம் தீட்டப்பட்டது?

இந்தத் திட்டத்துக்குள் போவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் விஷயத்தில் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கூடவே, விடுதலைப்புலிகள் இயக்கத்-துக்காக எங்கள் பொதுச் செயலாளர் வைகோ எப்படி-யெல்லாம் பாடுபட்டு வந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தான் முதல்வராக இருந்த போது கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ரௌலட் சட்டம் பெற்றுப் போட்ட குழந்தையான பொடா சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்தார். 8-க்கு4 அளவுள்ள கொட்டடியில் அடைத்து, தன்னு-டைய இலங்கை விசுவாசத்தை உலகுக்குக் காட்டி-யவர்.

அதன்பிறகும் காலத்தின் கட்டாயம், கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டதன் விளைவு-ஜெயலலிதாவோடு கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தன்னுடைய ஆணவப் போக்கை ஜெயலலிதா மாற்றிக் கொண்டுவிட்டார் என்று நம்பினோம். ஆனால், நான் என்றைக்கும் மாற மாட்டேன் என்று மீண்டும் ஒருமுறை அவர் உணர்த்தி விட்டார்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்-தாலும் நாங்கள் எங்கள் கொள்கைகளில் இருந்து துளியும் மாறவில்லை. விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று சொல்லி, நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தோம். அதெல்லாம் இலங்கை ஆதிக்க சக்திகளின் கையாளான ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. எங்களை எப்படி வெளியேற்றலாம் என்று காத்திருந்திருக்கிறார். தேர்தல் நேரம் பார்த்து, கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி வெளியேற்றி விட்டார்.

விடுதலைப்புலிகள் விஷயத்தில் யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத வைகோவின் குரல், சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக ‘ரத்தக் காட்டேறி’ ராஜபக்ஷே முடிவெடுக்கிறான். அதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டத்தின் படி தேவைப்படுவோருக்கு எலும்புத் துண்டுகளை தூக்கிப் போடுகிறான். பெற வேண்டியவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டு, எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.

கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற்றப்-பட்டதற்கு இது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் ஸ்டெர்லைட் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி, ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி வரையில் நடைபயணம் சென்றவர் வைகோ. நீதிமன்றம் வரை சென்றும் நியாயம் கேட்டவர். இதனால் வைகோவை பழிதீர்க்க அந்நிறுவனத்தின் சார்பிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவர்களும் இந்த வெளியேற்றத்துக்கு பின்னணியாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்.

இதெல்லாம் வைகோவுக்கும் தெரியுமா?

அவருக்கு இருக்கும் மனச் சோர்வுக்கிடையே இதனையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வாய்ப்-பில்லை. தெரிந்தாலும், இதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். ஏனென்றால், இப்படிப்பட்ட சதிகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் அவர். ‘ஜெயலலிதா நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே...

அதிலென்ன தவறு. நடந்திருப்பது அதுதானே. ஏற்கனவே கருணாநிதி இப்படித்தான் செய்தார். அவரைவிட மோசமாக ஜெயலலிதா செய்திருக்கிறார். துரோகத்தில், நயவஞ்சகத்தில், நம்ப வைத்துக் கழுத்தறுப்பதில் இருவரும் குறைந்தவர்கள் அல்ல. அதனால்தான் அந்த இரண்டு சக்திகளுமே வீழ்த்தப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட முடிவெடுத்திருக்கிறோம்.

தேர்தல் புறக்கணிப்பு செய்துவிட்டு, அவர்களை எப்படி வீழ்த்த முடியும்?

இந்தத் தேர்தலில் அழிய வேண்டிய இரண்டு சக்திகள் மோதிக் கொண்டால், ஏதாவது ஒரு சக்தி இன்னொரு சக்தியால் வீழ்த்தப்பட்டுவிடும். அப்ப, இயற்கையாகவே அரசியலில் ஒரு காலியிடம் உருவாகும். அந்த இடத்தை இட்டு நிரப்பும் சக்தி வைகோவுக்குத்தான் உண்டு. அந்த இடத்தில் இருந்து கொண்டு விசுவரூபமெடுத்து, தேர்தலுக்குப் பிறகு மீத-மிருக்கும் சக்தியை நாங்கள் வீழ்த்திக் காட்டுவோம். விசுவரூபமெடுப்பதற்கு முன்னால் இருக்கும் தற்காலிக அமைதிதான் தேர்தல் புறக்கணிப்பு.

அ.தி.மு.க. மீதான கோபத்தில் நீங்கள் தேர்தலை புறக்கணிப்பதால், உங்கள் தொண்டர்களெல்லாம் தி.மு.க.வுக்கு ஓட்டளித்து விட மாட்டார்களா?

அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அழிக்கப்பட வேண்டிய இரண்டு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் இலக்கு. அதற்காகத்தான் நாங்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறோம். எங்கள் தொண்டர்கள் புத்திசாலிகள். இந்தத் தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்துவிட்டார்கள். அதன்படியே வீழ்த்திக் காட்டுவார்கள்...’’

வைகோவை மறைமுகமாக தி.மு.க. பக்கம் அழைத்திருக்கிறாரே கலைஞர்?

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை கேள்வி-பட்டிருக்கிறீர்கள் தானே. அப்படித்தான் இருக்கிறது வைகோவை தங்கள் பக்கம் இழுக்க கருணாநிதி தூண்டில் போடுவதும். இதில் கூட அவருடைய சூழ்ச்சிதான் ஒளிந்திருக்கிறது. கருணாநிதியின் அழைப்புக்குப் பிறகு மனமிறங்கி கருணாநிதியை ஏற்றுக் கொள்வான் என்பதுதான், அவருடைய குள்ளநரித்தனம். அவர் அதை ராஜதந்திரம் என்று நினைத்து செய்கிறார். இந்த ஏமாற்று மொழிகளுக்கெல்லாம் ம.தி.மு.க. தொண்டன் இரையாகிவிட மாட்டான்.

தேர்தல் புறக்கணிப்பால் ம.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படாதா?

தேர்தலுக்குப் பிறகு நாங்கள் வீறுகொண்டு எழுந்து வருவோம். எங்களுக்கு ஏற்பட்ட காயங்களையெல்லாம் வீதிக்கு வீதி மக்களிடத்தில் கொண்டு செல்வோம். மறுமலர்ச்சி பயணத்தில் இப்போதுதான் புதிய வாசல் திறந்திருக்கிறது. இதை இனி சரியாகப் பயன்படுத்துவோம்!

நன்றி: தமிழக அரசியல்

"கலைஞர் அழைத்தால் சொரிப்புலிகூட வராது!’’ சீமான் பாய்ச்சல்

வரிப்புலி வைகோவுக்கு அழைப்பு:‘‘கலைஞர் அழைத்தால் சொரிப்புலிகூட வராது!’’சீமான் பாய்ச்சல்

 

அ.தி.மு.க. அணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேற்றத்துக்குப் பிறகு தமிழுணர்-வாளர்கள் மத்தியில் சலசலப்பும் பரபரப்பும் பற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே கருணாநிதியை மட்டும் எதிர்த்து வந்தவர்கள் இப்போது ஜெயலலிதாவையும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் களத்தையே ம.தி.மு.க. புறக்-கணித்து-விட்ட நிலையில்... ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர் சீமானின் வியூகத்தில், வேகத்தில் ஏதும் மாற்றம் இருக்குமா என்பதுதான் தமிழுணர்-வாளர்களின் கேள்வி. இந்நிலையில் சீமானை சந்தித்தோம்.

வைகோவை முதன்முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்குமாறு நீங்கள்தான் நேரில் சென்று அழைத்தீர்கள். இன்று ம.தி.மு.க.வின் முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிகுந்த மன வருத்தத்தையும், மனக் காயத்தையும் தருகிற முடிவாக இருக்கிறது. அண்ணன் வைகோ போன்ற நேர்மையாளர், தூய்மையாளருக்கு இந்த அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற நிலையைப் பார்த்தால், ஒருவகையில் அச்சமாகக் கூட இருக்கிறது. ஐந்து வருடம் கூட்டணியில் இருந்தவரை ஜெயலலிதா வஞ்சித்துவிட்டார்.


வைகோ மீது நடுநிலையாளர்-களும், பொதுப் பிள்ளைகளும் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இப்போது அவரை எதிர்ப்பவர்-களுக்குக்கூட தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும், அண்ணன் எடுத்த இந்த முடிவு தற்காலிகமானதுதான். அவருடைய ஆற்றலையும் வீச்சையும் நாங்கள் அறிவோம். அவர் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக்கணித்திருக்கிறார். மீண்டும் மெருகேறி வருவார்.

ம.தி.மு.க.வின் முடிவால் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா?

மாற்று அரசியலுக்கான லட்சியப் பயணத்தோடு செல்லும் இயக்கம் நாம் தமிழர் இயக்கம். அண்ணன் வைகோ களத்தில் இருந்திருந்தால் அவரோடு சேர்ந்து போராடியிருப்போம். அவர் இல்லாததால் வருத்தமே தவிர, அதையே நினைத்து கவலைப்பட்டு களத்திலிருந்து பின்வாங்க முடியாது.

என் தமிழினத்தை அழித்த காங்கிரஸை கருவறுக்கும் பணியிலிருந்து எக்காலத்திலும் என்னால் மாற முடியாது. தமிழகத்து உறவுகளும், உலகத்து உறவுகளும், தமிழ்நாட்டில் காங்கி-ரஸை அழிக்கவேண்டியதன் அவசியத்தை எனக்கு தினம்தினம் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸை தோற்-கடிக்கவில்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழனே இல்லையென்றுதான் அர்த்தம். அதனால் காங்கிரஸை எதிர்க்கும் வலுவான அணியை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை. அந்த ஆதரவு இரட்டை இலைக்கா, வேறு யாருக்குமா என்பதி-லெல்லாம் என் கவனம் இல்லை.

காங்கிரஸை தோற்கடிக்க சிறப்பு வியூகங்கள் வகுத்திருக்கிறீர்களாமே?

களத்தில் புகும் முன் வியூகங்கள் வகுக்காமல் இருக்க முடியுமா? எங்களது ஆன்றோர் பேரவையை கூட்டி, அதில் சில சிறப்பு வியூகங்கள் பற்றி விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளர்களை குறிப்பாக, சோனியாவின் மகன் ராகுலின் சிறப்பு அக்கறையின் பேரில் நிறுத்தப்படும் இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஒட்டுமொத்தமாக தோற்கடிக்க உறுதி பூண்டுள்ளோம்.

‘போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்’ என்று அடிக்கடி சொல்வார் அண்ணன் பிரபாகரன். அந்த வகையில் இது வெறும் தேர்தல் அல்ல. பிரபாகரனின் தம்பிகளுக்கும், சோனியாவின் மகனுக்கும் நடக்கும் ரத்தம் சிந்தாத யுத்தம். தமிழனை கருவறுத்த அந்தக் கட்சியை கருவறுக்க என் தம்பிகள் உறுதிபூண்டுள்ளனர். களத்திலும், கருத்திலும் வலிமையாக செயல்பட்டு கொலைகார காங்கிரஸை ஓட ஓட விரட்டியடிப்போம்.

எதிரணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தை-களும், பா.ம.க.வினரும் உங்கள் நண்பர்கள்-தானே?

அவர்களெல்லாம் என் உடன் பிறந்தோர். இன்று காங்கிரஸை ஆதரிக்கும் அணியில் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்யவேண்டும் என்பது என் தம்பிகளுக்குத் தெரியும்.

தமிழின உணர்வாளர்களை ஒன்றி-ணைக்க நீங்கள் திட்டம் தீட்டுவதாக செய்திகள் வருகிறதே...

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய சக்திகளின் பக்கம் தமிழ் உணர்வாளர்கள் பிரிந்து கிடப்பதும், ஐந்து இடங்கள், பத்து இடங்களுக்காக அவர்கள் பின் நிற்கும் இழிநிலையும் 2011 தேர்தலோடு முடிந்துவிடும். இந்த இரு கழகங்களுக்கும் மாற்றாக தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்து, கட்டமைத்து பெரும் மாற்று சக்தியாக உருவாக்கும் முயற்சிகளை இந்தத் தேர்தலுக்குப் பிறகு தொடங்க இருக்கிறேன். 2016 தேர்தலில் தமிழர் சக்தி தனிபெரும் சக்தியாக உருவாக்கம் பெற்று, தமிழர் விரோத சக்திகளை வீட்டுக்கு அனுப்பும் நிலைமை உருவாகும். அதற்கான பணியை அயராது ஆற்றுவோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் பற்றி...

தமிழன் இத்தனை காலமாக கிரைண்டர், மிக்ஸி வாங்க வக்கில்லாதவ-னாகவா இருக்கிறான்? அப்படி இருக்-கிறான் என்றால் அவனை அப்படிப்பட்ட வக்கற்ற நிலைக்கு தள்ளியது இந்த ஆட்சிதானே? தமிழனின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வழியேதும் செய்யாமல் இலவசம், இலவசம் என்று கூறி அவனை திண்ணைச் சோம்பேறியாக்கி தாங்கள் கொழுப்பதற்கான தந்திரம் இது. இலவசம் என்று சொல்லியே ஒரு லட்சம் கோடிக்கு மேலான கடனை தமிழன் தலையில் சுமத்தியிருக்கிறார் கருணாநிதி. எனவே, இதைத் திட்டம் என்று சொல்லக் கூடாது. தமிழனுக்கு நட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வரிப்புலியே வருக என்று வைகோவை கலைஞர் அழைத்திருக்கிறாரே?

எதற்கு? அந்த வரிப்புலியை அழைத்து மீண்டும் புழலிலோ, வேலூரிலோ போடவா? கருணாநிதி அழைத்தால் ஒரு சொரிப்புலி கூட வராது.

நன்றி; தமிழக அரசியல்

Saturday, March 26, 2011

இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., கூட்டணி கிடையாது: வைகோ


தி.மு.க.,வையே ஜீவனாக, வாழ்வாக, உயிராக நினைத் திருந்தவன் நான். என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு, 1993ம் ஆண்டு தி.மு.க., விலிருந்து வெளியேற்றப் பட்டேன். இதனால், 1994ம் ஆண்டு ம.தி.மு.க., உதய மானது. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். வெறும், 316 ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வியடைந்தேன். 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.

அடுத்த ஆண்டு, நாங்கள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க., வந்தது. அந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை; அவர்கள் தான் எங்கள் அணிக்கு வந்தனர். 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி எங்கள் கட்சியை அவமதித்தார். 22 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை எனக் கூறினார். ஒட்டுமொத்தத் தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க, அந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத் தோம். 35 தொகுதிகளில் போட்டி யிட்டு, ஆறு தொகுதி களில் வெற்றி பெற்றோம். ஏழெட்டு தொகுதி களில், சொற்ப ஓட்டு களில் வெற்றி வாய்ப் பை இழந்தோம். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், நாங்கள் தனித்து வென்ற நகராட்சிகளிலேயே எங்களுக்கு குறைவான வார்டுகள் ஒதுக்கப்பட்டன; பொறுத்துக்கொண்டோம். எங்கள் எம்.எல்.ஏ., வீர.இளவரசன் இறந்த திருமங்கலம்தொகுதியை அ.தி.மு.க., வலியுறுத்திக் கேட்டது; விட்டுக்கொடுத்தோம். எங்கள் வேட்பாளர் வென்ற கம்பம் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறினார்; ஏற்றுக் கொண்டோம். கொள்கைகளைத் தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் அ.தி.மு.க.,வுடன் அனுசரித்தே நடந்துகொண்டோம்.

இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன், எங்களை அல்லவா முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். சரி... புதிய கட்சிகள் வருகின்றன... நாம் தான் ஏற்கனவே இருக்கிறோமே என, அமைதி காத்தோம். தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த முதல் பேச்சுவார்த்தையில், "கடந்த முறை கொடுத்த 35 கொடுத்துவிடுங்கள்' என்றோம். "நிறைய கட்சிகள் வருகின்றன; கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றனர். அடுத்த முறை, 30 தொகுதி கேட்டோம். இன்னும் குறைக்கக் கூறினர். பிப்ரவரி 28ம் தேதி, "25 இடங்களாவது வேண்டும்' என்றோம். மார்ச் 8ம் தேதி போயஸ் தோட்டத்திற்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில், "நீங்கள் ஆறு இடங்களில் தானே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அவற்றையே எடுத்துக்கொள்ளுங்கள்' என்றனர். இதை என் தோழர்கள் வந்து சொன்னபோது, இதயத்தில் ஈட்டி பாய்ச்சியது போல இருந்தது. ஆனாலும், அமைதியாக இருந்தேன். மறுபக்கம், கம்யூனிஸ்டுகளுக்கு 10, மார்க்சிஸ்டுக்கு 12, இன்னொரு கட்சிக்கு 41 என, ஒதுக்கீடுகள் முடிந்தன. மார்ச் 12ம் தேதி, கூட்டணிகளுக்கு 74 தொகுதி ஒதுக்கியது போக, 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுவிட்டது. அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அன்றே, தே.மு.தி.க., அலுவலகத் துக்குச் சென்றனர். அவர்கள் பேச்சு நடத்த வேண்டுமென்றால், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்?

மார்ச் 13ம் தேதி, அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து எங்களைத் தொடர்புகொண்டனர். எட்டு "சீட்' ஒதுக்குவதாகக் கூறினர். நான் பதில் ஏதும் ஏதும் சொல்லவில்லை. மறு நாள் காலை, 11 மணிக்கு பன்னீர் செல்வமும், செங் கோட்டையனும் என் வீட்டுக்கு வந்தனர். அரை மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் புரியவில்லை. நேற்று ஒரு எண்ணிக்கையில் "சீட்' தருவதாகக் கூறினார்களாம். அது கொடுக்க முடியாத நிலையாம். ஒன்றை குறைத்துக்கொண்டு ஏழு சீட் தான் தர முடியும் எனக் கூறுகின்றனர்' என்றனர். "கூட்டணியை விட்டு வெளியே போ' என்பதைத் தவிர, இதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்? நான், "தேர்தலில் வெற்றி பெற்று, நல்ல பதவிகளுக்கு வாருங்கள்' என வாழ்த்துச் சொல்லி அனுப்பிவிட்டேன். அதேசமயம், எங்களுக்கு 18 தொகுதி தருவதாகவும், 19 தொகுதி தருவதாகவும், வைகோ மறுக்கிறார் என்றும், அ.தி.மு.க., தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு தகவல்கள் தரப்பட்டன.

மார்ச் 15ம் தேதி இரவு, அ.தி.மு.க.,விலிருந்து பூங்குன்றன் தொடர்புகொண்டு, "அம்மா இரண்டு பேரை உங்களுடன் பேச்சு நடத்த அனுப்பி வைக்கிறார்' என்று சொன்னார். வீட்டுக்கு வந்தவர்கள், ஒன்பது தொகுதிகள் தருவதாகக் கூறினர். "போயஸ் கார்டனுக்கு வாருங்கள்' என்றனர். "நான் வரவில்லை. வந்தால் வாக்குவாதம் செய்ய வேண்டியதிருக்கும். மனச் சங்கடம் வந்துவிடும். நான் கேட்ட, 23 தொகுதிகளில் இரண்டு இடங்களை குறைத்துக்கொண்டு, 21 தொகுதிகள் கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், வருகிறேன்' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளில், இரண்டு கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு, 74 இடங்கள் போக, ம.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு முடியாத நிலையில், அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தால், ம.தி.மு.க.,வை பிடரியைப் பிடித்து, நெட்டித் தள்ளியது தவிர வேறென்ன? "இந்தப் பட்டியல், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேறு நபர்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தான் கூட்டணிக் கட்சிகள் கேட்ட சீட்டுகள் வழங்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது' எனச் செய்திகள் வெளியாயின. பட்டியல் மாற்றப்பட்டது, கட்சியின் பொதுச் செயலருக்கே தெரியாது என்றால், அவர் செயல் இழந்துவிட்டாரா? அவரை யாரும் ஆட்டிப் படைக்கின்றனரா? தொகுதி கொடுப்பதிலேயே இவருக்கு பங்கில்லை என்றால், இப்படிப் பட்டவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள். ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரின் மீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன். இவ்வாறு, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து நாங்கள் தூக்கியெறியப்பட்டோம்.

மார்ச் 19ம் தேதி, ம.தி.மு.க.,வின் உயர்மட்டக் கூட்டம் தாயகத்தில் நடந்தது. 56 நிர்வாகிகள் பேசினர். 48 பேர் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என்றனர். இரண்டு பேர் மட்டும், 20 தொகுதி வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றனர். ஆறு பேர், தேர்தலைப் புறக்கணிப்போம் என்றனர். அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் மட்டும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து அறிவித்தோம். காலம் சில படிப்பினையைத் தந்ததால் ஜெயலலிதா மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். அவரின் எதேச்சிகாரத்திலும், ஆணவத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; இனியும் ஏற்படாது. என் முடிவுக்கு வருத்தம் தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியது, அரசியல் ஆதாயம் கருதித் தான். அவர் எப்படிப்பட்டவர் என்று கணினியில் பணி செய்பவர்கள் முதல், கழனியில் வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் சேர்வதற்கு, ம.தி.மு.க., ஒருபோதும் நினைக்காது. மக்கள் மத்தியில் ஜாதி, மத பேதம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ம.தி.மு.க., திகழ வேண்டும். தமிழகத்தை ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன், 10 ஆண்டுகளுக்கு முன் ம.தி.மு.க., தீர்மானம் போட்டது. இதே முடிவுடன் கட்சி மீண்டும் நடைபோட தற்போதைய சூழ்நிலை உருவாகியுள்ளது; இது, காலம் தந்த அருட்கொடை. அ.தி.மு.க.,விலிருந்து விலகியது, நாங்கள் விரும்பி எடுத்த முடிவல்ல; காலத்தால் ஏற்பட்ட முடிவு. இந்த முடிவில் ஒரு சதவீதம் கூட, மறு பரிசீலனை செய்ய இடம் கிடையாது. அ.தி.மு.க., கூட்டணியில் ம,தி.மு.க.,வுக்கு, 35 இடங்கள் கொடுத்தால் கூட மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. நன்றி: இமயம் "டிவி'

வைகோ பொதுச் செயலர், ம.தி.மு.க.,
இயற்பெயர் : வை.கோபால்சாமி
வயது : 67
சொந்த ஊர் : கலிங்கப்பட்டி, நெல்லை மாவட்டம்.
ஆரம்பகாலம் : தி.மு.க.,வின் முன்னணித் தளபதி
நிறுவனர் : மறுமலர்ச்சி தி.மு.க.,
ஆண்டு : 1994
பதவி : பொதுச் செயலர்
அனுபவம் : தொடர்ந்து 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.,
குறிப்பு : சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல்வாதிகளில், மிக அதிக காலம் சிறைவாசம் இருந்தவர்.

Thursday, March 24, 2011

தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும் - வைகோ!

 
"2001ல் திருச்சியில் நடந்த மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று இயற்கையாகவே நடந்து விட்டது.  தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும்" என மதிமுக தலைவர் வை. கோபால்சாமி கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஜெயலலிதா வேட்பாளர்கள் பட்டியலைத் தன்னிச்சையாக அறிவித்தார். இதையடுத்து கூட்டணி கட்சிகள் மூன்றாவது அணி அமைக்க முயன்றன. மதிமுக மட்டும் மவுனம் காத்து வந்தது.

ஜெயலலிதா மீண்டும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்து விரும்பும் தொகுதிகள் தருவதாக உறுதியளித்தார்.  புதிய தமிழகம், கம்யூனிஸ்ட்கள், சமக, மமக, மூமுக, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு விரும்பும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மதிமுகவுடன் மட்டும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் மதிமுக உயர்மட்டகுழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  தேர்தலை மதிமுக புறக்கணிப்பு செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மதிமுகவுக்குக் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கு உள்ள சங்கரன்கோவில்,  கோவில்பட்டி, விளாத்திகுளம், வாசுதேவநல்லூர் பகுதி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து சங்கரன்கோவில் பகுதி தொண்டர்கள், "தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரீசீலனை செய்யவேண்டும். 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வேண்டும். மதிமுக தனித்தன்மையை இழக்காமல் தொடர்ந்து செயல்பட வேண்டும்" என தலைமைக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினர். 

இந்நிலையில் நேற்று முன்தினம், வைகோ பாளையங்கோட்டையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு வந்தார். அங்கு உடல்நலமில்லாத அவரது தாய் மாரியம்மாளைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு ஒரு துக்கவீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அங்குக் கூடிய கட்சி தொண்டர்களிடம் பேசும்போது, "மதிமுக நிலைப்பாடு குறித்து தனியார் தொலைகாட்சியில் விபரமாக பேசிவிட்டேன். 2001ல் திருச்சியில் நடந்த மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று இயற்கையாகவே நடந்து விட்டது.  தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும். இந்த முறை மதிமுக தேர்தலில் போட்டியிடாமல் வெளியில் இருந்து கவனிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் புறக்கணிப்பு என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

அதிமுகவுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்- மதிமுக!

"நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்று மதிமுக மாநில அரசியலமைப்பு குழு உறுப்பினர் நிஜாம் கூறினார்.

இதுதொடர்பாக அவர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பாளையங்கோட்டை தொகுதியில் படித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக பணிகளில் நாங்கள் ஈடுபட்டதால் என்னைப் பாளை தொகுதியில் தனியாக போட்டியிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் கட்சி எடுத்த முடிவை மீறி நான் போட்டியிட விரும்பவில்லை.

அதிமுகவில் எங்களுக்கு அவமானமும், அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. இனி ஒருபோதும் அந்தக்க் கூட்டணியில் சேரமாட்டோம். அந்தக் கட்சியில் எங்களுக்குக் கிடைத்த அவமானத்தால், அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நெல்லை மாவட்டம்தான்.

தொண்டர்களின் யோசனையை வைகோ ஏற்றுக்கொண்டு உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என அறிவித்துவிட்டார். எங்களைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றியதால் இழப்பு அதிமுகவிற்குதான். அதற்காக அதிமுகவுக்குத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்.  அதற்காக எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்யமாட்டோம். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று எங்கள் தொண்டர்களுக்குத் தெரியும். அதை சரியாக அவர்கள் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதுங்குவது பாய்வதற்குத்தான் : வைகோ ஆவேசம்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார்.

அவர்,  ’’சட்டசபையில் மதிமுக பிரதிநிதிகள் இடம் பெறுவதை ஸ்டெர்லைட் நிர்வாகம் தடுக்கிறது.   மதிமுகவுக்கு எதிராக மாற்றுக்கட்சிகளுக்கு பணம் கொடுக்கிறது ஸ்டெர்லைட்.
 
ஸ்டெர்லைட் ஆலையை எதித்து மதிமுக வழக்கு தொடுத்திருப்பதால்  ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்று பேசினார்.

அவர் மேலும்,  ’’தேர்தலை புறக்கணிக்கும் முடிவிலிருந்து மதிமுக ஒரு போதும் பின்வாங்காது.  தேர்தலை கண்டு பயந்து ஓடவில்லை.  பதுங்குவது பாய்வதற்குத்தான்’’ என்று ஆவேசமாக பேசினார்.

''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!''- வைகோ பொளேர் பேட்டி


ப.திருமாவேலன், படங்கள் : சு.குமரேசன்
வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு. கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்!

''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.


பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.

ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.

'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?''

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார். எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!

அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை. ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.

சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?''

''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!

48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.


ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''

''தனியாக நிற்பது..?''
''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?''

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.

ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?''

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?''
''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?''

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

'' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?''

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?''

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''

நன்றி... ஆனந்த விகடன்

Tuesday, March 22, 2011

வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்பு

சென்னை, மார்ச்.22,2011

'விடுபட்டோர், விரட்டப்பட்டோர், துரத்தப்பட்டோர் அனைவரும் வாருங்கள்;  ஒருங்கிணைந்து களம் காண்போம்' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது தொண்டர்களுக்காக விடுத்துள்ள அறிக்கை:

தேர்தல் களம் புகுந்திட பல்வேறு கட்சிகளின் பாசறைகள் ஏறத்தாழ தயார் நிலையில் அமைக்கப்பட்டுவிட்டன. எதிர்வரிசையில் நிற்கக்கூடிய அணி தேர்ப்புரவி ஆட்பெரும் படையை உற்றுப் பார்க்கிறேன். எதிர்வரிசையில் இந்திரஜித்தனைக்காண முடியாத காரணத்தை உணர்ந்து கொண்டவுடன் - களத்தில் அந்த யோசனைக்கு இடமளிப்பது நமது குறியை குலைத்துவிடும் என்பதால் அதைப்பற்றி அதிகமாக கவலைப்படாமல், ஒருசில நிமிடங்கள் அதுபற்றிய சிந்தனையிலே ஈடுபட்டேன்.

5000 ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்ட திராவிட உணர்வு பட்டுப்போகாமல் காப்பாற்றி வந்த பெரியாரெனும் பேருருவில் - பிரிவுக்கணைகள் புகுந்து - இரு இயக்கமானோம். அவற்றில் ஓர் இயக்கம் அண்ணா தலைமையில் இன உணர்வு பகுத்தறிவு இயக்கமாகவும் - பிறிதொரு இயக்கம் பகுத்தறிவு கவலையின்றி; ஆனால் பண்பாடு காத்திடும் இயக்கமாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையிலும் இயங்கிய ஏற்றமிகு நிலைகண்டு- அதன் எழிலை குறைத்திட எத்தனையோ சதிகள், சாகசங்கள்! அத்தனைக்கும் ஈடுகொடுத்து ஒன்றை ஒன்றுவென்றும்-ஒன்றால் ஒன்று வீழ்ந்தும் - அவ்விரு திராவிட இயக்கங்களும் தேசத்தை ஆளும் சக்தியாக செழித்து வளர்ந்தது கண்டு - அவ்விரண்டையும் அழித்தொழிக்க ஐதீகப்படை திரண்டது. இரு படைகளும் ஒரு படையாய் இருந்து - செறு பகை வீழ்த்திட அணி வகுப்போம் வாரீர் என்று வடக்கிருந்து பறந்து வந்த சமரச புறாவையும்-அதன் சிறகொடித்து விரட்டிவிட்டனர் சதிகாரர்கள்.

அதன்பிறகும் அமைதியில்லை - சகோதர யுத்தம் தொடரட்டுமென்றும் - அப்போதுதான் சர்க்கரை தம் வாய்க்கு நிறைய கிடைக்குமென்றும் எண்ணியோர் கண்ணியம் துறந்த காரியத்தில் ஈடுபட்டதால் - திண்ணியராம் திராவிட தலைவர்கள் உருவாக்கிய இயக்கம், சிதைந்து சிதறுண்டு போக சிலந்திகள் வலைபின்னத்தொடங்கின. அந்த வலையில் சிக்காத இயக்கம்தான் அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் இந்த தீரர்கள் மிகு இயக்கம். அதனால்தான் வலை அறுந்திடவும் இல்லை- விலை போகவும் இல்லை- நிலை குலையாத நேர்மை, நியாயம், நீதி, உண்மை, உறுதி, வாய்மை அனைத்தும் கொண்டு வலிமை சேர் இயக்கமாக அறப்போர் வாள் தூக்கி அணி வகுப்பில் முந்தி நிற்கிறது.

எந்தவொரு இயக்கமும் ஜனநாயக வழித்தடத்தில் தேர்தலை சந்திக்க களம் இறங்கிவிட்டால் - ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டிய பொதுமக்கள் மாத்திரமல்லாமல், அந்த பொதுமக்களிடத்திலே-தமது கட்சிக்காக ஆதரவு திரட்டக்கூடிய தொண்டர்கள், தோழர்கள் அணி வகுத்துக்குவிந்திடுவது இயல்பேயாகும். அவர்கள் எந்த வரிசையினராயினும் நம் வரிசையினர் என்றே போற்றிப்புகழ்வோம். எதிரெதிர் அணியிலே அவர்கள் நிற்க நேரிட்டாலும் அவர்களும், நாமும் சேர்ந்து ஜனநாயக கோவில் திருப்பணியை நடத்தவே-நடத்தி முடிக்கவே-அதில் எழிலும் ஏற்றமும் கண்டு களிக்கவே-நாம் சேர்ந்துள்ளோம் இந்த இயக்கத்தில் என்ற நினைப்போடு பணியாற்றினால் மாண்பு காத்திட-மனித நேயம் போற்றிட - நாம் பிறந்த மண்ணின் புகழ் பெருக்கிட-நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாவோம்.

நம் வியர்வையால் கிடைக்கும் வெற்றியைப்போற்றிடவும் - நமது அயர்வினால் அதனை விடுத்து அதற்காக ஜனநாயக மாண்பினையே தாக்கிடவுமான நிலைக்கு நம்மை நாமே தள்ளிக் கொள்ளாமல் இருக்கத்தான்-காற்றடிக்கும் நேரத்திலேயே பதர் போக்கி - பயன் விளைக்கும் தானிய மணிகளை குவித்து வைத்ததுபோல் நமது படையின் வீரர்களை அணிவகுத்து வைத்திருக்கிறோம்.

சோர்வறியாத படை -
சோடை போகாத படை -
சொர்க்கம் அழைக்கிறது வா என்றாலும், அதில்
சொக்கிப்போய் சொன்னது ஒன்று
செய்வது ஒன்றாக -
போரிடுவது போன்
போலிப்படையல்ல இப்படை;
"இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?''

என நம் அண்ணா அடிக்கடி சொல்வாரே... அப்படையே இப்படையாம்!

பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால் - இடையில் இப்படை பெறும் வெற்றிதான் இமாலய வெற்றியாகும்-இமாலயத்தை வளைக்கும் வெற்றியாகும்.

எனினும் "என் தலைவர் இருந்த நாற்காலி காலியாகவே இருக்கிறது'' என மொழிந்து - பெரியாரின் தொண்டனாக-அவரின் சீடனாக - அவரின் கொள்கை நாதமாக விளங்கிய அண்ணா - நமையெல்லாம் ஒருங்கிணைத்து - பொருதடக்கை வாள் கொடுத்து- "ஜனநாயக அறப்போரில் வென்றிடுக தம்பிகாள்!'' என்று அனுப்பி வைத்தார். அவர்களில் ஓரிரு தம்பிமார்கள் எங்கெங்கோ சிதறிப்போயினர் என்றாலும்-அங்கெல்லாம் அலைந்து திரிந்து அவர்களையும் ஒன்றிணைக்க-அரும்பாடுபட்டவனின் கரம்தான் இந்தக் கரம்.

இந்தக் கரம் தழுவும் உணர்விலே கட்டுண்டு - வாரீர் அனைவரும் ஒருங்கிணைந்து களம் காண்போம் என்றழைக்கும் வேளை இது!

திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை என எதிரிகள் துள்ளிக்குதிக்கும் நிலைதனை மாய்ப்போம்.

விடுபட்டோர்-
விரட்டப்பட்டோர்-
துரத்தப்பட்டோர்-
விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு - தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல் - தூய ஞானிகளைப்போல் - நான் தவம் இருக்கின்றேன் - படை பலம் போதாது என்பதால் அல்ல! இருக்கின்ற படை இன்னும் வலிமையாய்-உறுதியாய்-நிச்சயம் வாகை சூடுவதாய் அமைய வேண்டும் என்பதற்காக!

என்னரும் உடன்பிறப்புக்காள்!
என் உயிரினும் இனியோரே!
இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்!
வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக!.'

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

புறக்கணிப்பு முடிவில் மாற்றமில்லை: வைகோ உறுதி

சட்டப்பேரவைத் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.

உடல் நலமில்லாத தன்னுடைய தாய் மாரியம்மாளை சந்திப்பதற்கு பாளை வந்த வைகோ, பின்னர் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றார்.

அங்கு இன்று காலை மதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "மதிமுக நிலைபாடு குறித்து ஏற்கெனவே விவரமாக தெரிவித்துவிட்டேன். 2001-ல் திருச்சியில் நடந்த கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இன்று இயற்கையாகவே நடந்துவிட்டது.

தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும். இந்த முறை மதிமுக தேர்தலில் போட்டியிடாமல் வெளியே இருந்து கவனிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை," என்றார் வைகோ.

அதிமுக அணியில் மதிமுக: இடதுசாரிகள் விருப்பம்

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தமது கட்சி அவமதிக்கப்பட்டதன் காரணமாக, அதிமுக அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த வைகோவின் மதிமுக, இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது. 

மதிமுகவின் இந்த முடிவு வருத்தம் அளிப்பதாக, வைகோவுக்கு அனுப்பிய கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "வரலாறு காணாத ஊழலில் திளைத்து வரும் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளினால் மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது.

நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய மகத்தானப் போராட்டத்தில் அதிமுக தலைமையில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்டு பல கட்சிகள் அணிவகுத்து ஓரணியில் நிற்கின்றன.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முக்கியமான பங்குள்ளது.

இச்சூழலில் மதிமுக தமிழ்நாடு - புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது.

மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்து அதிமுக தலைமையிலான அணியோடு இணைந்து, ஊழலில் திளைத்து வரும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திடும் ஜனநாயகப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மதிமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறது," என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெ.க்கு வேண்டுகோள்...

இதனிடையே, வைகோ பிரச்னையில் ஜெயலலிதா சுமுக தீர்வை உருவாக்கித் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற்று வந்த மதிமுக தற்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். திமுக- காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, மதிமுகவும் அதன் பொதுச் செயலாளர் வைகோவும் தாங்கள் எடுத்துள்ள முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இதற்கான சுமூகமான தீர்வை உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

வைகோ ...!!!!!!


அரசியலில் யாரும் சரியானவர்கள் இல்லை என குறைபட்டு கொள்வோம் அதே சமயம் சிறப்பாக செயல்படகூடிய ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தால் அவர்களை கண்டுகொள்ளவும் மாட்டோம். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். இப்போது முன்னே தெரிவது வைகோ...!

இவரை பற்றி பொதுவானவர்களின் அபிப்ராயங்கள் என்ன..?

சிறந்த பேச்சாளர்

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல் பட கூடியவர்

உலக வரலாறு அறிந்தவர்

போராட்ட குணம் கொண்டவர்

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களிடமும் நன் மதிப்பு பெற்றவர்

சிறந்த இலக்கியவாதி

விளையாட்டு வீரர்

இன்னும் பல விஷயங்கள் சொல்லலாம்.


இவரை குறை சொல்லுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

மாறி மாறி வைத்து கொண்ட அரசியல் கூட்டணிகள்...! இதுதான் அவர்மீது சொல்ல படுகிற முக்கிய குற்றசாட்டு...! இன்றய அரசியல் சூழ் நிலையில்
கூட்டணி மாறுதல் ஒரு விஷயமே அல்ல...!

ஒரு கால கட்டத்தில் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி அமைக்க போகிறவர் என எதிர்பார்க்கபட்டவர். சென்ற இடமெங்கிலும் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார். ஆற்றலும்,திறமையும்,துடிப்பும் மிக்க ஒரு அரசியல் தலைவர் ஏன் இன்னும் அவருக்குண்டான இடத்தை அடையவில்லை...? ஆரம்ப காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு தற்போது குறைந்து இருப்பதற்க்கு காரணம் என்ன..?

வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றபட்ட போது தமிழகத்தில் அப்போது அதிமுக ஆட்சி..! அப்போது அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் இருந்தார்கள்..!


வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றபட்ட போது அவர் பின்னால் அணி வகுத்த மக்கள் கூட்டத்தை மூன்று விதமாக பிரிக்கலாம்..!

1. அதிமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்தவர்கள் ஜெயலலிதாவை வீழ்த்த வந்த சக்தியாக வைகோவை பார்த்து அவர் பின் அணி திரண்டனர்.

2. திமுகவை பிடிக்காதவர்கள், திமுவில் இருந்து விலகி வந்தவர்கள் ஒரு கணிசமான அளவில் திரண்டனர் .

3. இந்த மூன்றாமானவர்கள் மிக முக்கியமானவர்கள்..! வைகோவின் ஆற்றலையும் திறமையையும் கண்டு இவர்தான் தலைவர் ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெருமளவில் இளைஞர்கள் அவர் பின்னால் அணி வகுத்தனர்.

மதிமுக ஆரம்பிக்க பட்டு முதன் முதலில் சந்தித்த தேர்தல், மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை யில் நடந்த இடைதேர்தல்..! மயிலாப்பூரில் பத்தாயிரத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றாலும் பெருந்துறையில் மதிமுகவிற்க்கு இரண்டாம் இடம் கிடைக்கவே...! பெரும் உற்சாகம் அடைந்தனர் மதிமுகவினர்.

அதன் பிறகு மதிமுக எந்த ஒரு தேர்தலையும் தனக்கு சாதகமான சூழ்நிலையில் சந்திக்கவே இல்லை.

அடுத்து வந்த பொது தேர்தலில் தனித்து களம் கண்டது மதிமுக. அப்போது இருந்த அதிமுக எதிர்ப்பு , மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்,ரஜினி ’’குரல்’’ என ஒரு பெரும் அலையில் மதிமுக எடுபடவில்லை. ஆனால்..! அந்த கடுமையான சூழ்நிலையிலும் கிட்ட தட்ட இருபது லட்சம் ஓட்டுகள் பெற்றது மதிமுக.

காலபோக்கில் பாராளுமன்றதேர்தலில் வைகோ ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்கிறார். வைகோ வுடன் இருந்த அதிமுக எதிர்ப்பாளர்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தை அளிக்கவே ..! வைகோ வுடன் இருந்த அதிமுக எதிர்ப்பாளர்கள் அவரைவிட்டு பிரிந்தனர்.

மீண்டும் ஒரு சூழ்நிலையில் வைகோ திமுகவுடன் கூட்டு சேர்கிறார் . இப்போதும் பலர் அதிருப்தி அடைந்து விலகுகிறார்கள்.
ஆனால்..! வைகோவை தன் தலைவராக எண்ணி அவரிடம் சேர்ந்த பெருமளவிலான இளைஞர் கூட்டம் ஒருபோதும் அவரை விட்டு விலகவில்லை.
இந்த கூட்டத்தை கொண்டே வைகோ அரசியலில் பெரும் வெற்றியை அடைய முடியும்.

ஆனால்..! இவர்களுக்கும் வந்தது சோதனை ..! ஆட்சி யில் இருந்த ஆளும் வர்கத்தினர் மதிமுகவை சிதைக்கும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினர். தேன் கூட்டில் ராணிதேனியை தேடி நசுக்குவதுபோல் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து போட்டனர். எந்த ஒரு போராளிக்கும் மனதில் ஒரு சமாதான இடைவெளி உண்டு அந்த இடைவெளியில் மிக சாதுர்யமாக தங்களை சொருகி கொண்டனர் ஆளும் வர்கத்தினர்.

இதற்கு ஒரு உதாரணம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் சக்தியாக விளங்கியது மதிமுக..! ஆனால் இப்போதுஅங்கே மதிமுக தலைகள் யாரும் இல்லை .. ! எல்லோரும் திமுகவில் ஐக்கியம்..! கட்சி மாறியவர்களை குறை சொல்லி பயன் இல்லை நடைமுறை அரசியல் சூழ்நிலையில் தவிர்க்க முடியாமல் நிர்பந்தத்திர்க்கு உட்பட்டு கட்சி மாறிவிட்டார்கள்.

ஆனால்..! வைகோவை மனதில் வைத்துள்ள தொண்டர்கள் இன்றுவரை அவருடன்தான் உள்ளனர். இவர்கள் உறுதியானவர்கள். இன்றளவில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் வைகோவை தலைவராக எண்ணி,செயல்பட ஆற்றல் மற்றும் ஆர்வம் இருந்தும் தங்களை வழி நடத்த சிறு தலைவர்கள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஏராளம்..!

மதிமுகவிற்கு ஏற்பட்ட அதே நிலை சில மாதங்கள் விஜயகாந்தின் தேமுதிக விற்கும் ஏற்பட்டது . சிறுசிறு தலைவர்கள் எல்லோரும் நிர்பந்திக்க பட்டார்கள் சிலர் கட்சி மாறிபோனார்கள்.சிலர் ஒதுங்கினார்கள்.நன்கு செயல் பட்டு வளர்ந்து வந்த தேதிமுக பல இடங்களில் தொய்ந்து போனது..! ஆனால்...! சட்டென சுதாரித்த விஜய காந்த் புதிய நிர்வாகிகளை நியமித்து தொய்வை போக்கினார்..!

இந்த இடத்தில் வைகோ இதேபோல செயல் பட்டு இருந்தால் இப்போது மேலும் வலிமையுடன் மதிமுக இருந்திருக்கும்.

பிறகட்சிகளும்...! மதிமுகவும்...!
திமுக
முதல் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று ..! அனைத்து சிறிய ஊர்களிளும் கிளைகள் உண்டு.! அசைக்க முடியாத தொண்டர்கள் பலம்...! குடும்ப அரசியல் இதன் பலவீனம்..!

அதிமுக
திமுகவிற்க்கு சளைத்தது அல்ல..! அனைத்து சிறிய ஊர்களிலும் கிளைகள் உண்டு.! உணர்சி வசபட்ட தொண்டர்கள் அதிகம்..! தடாலடியாக நிர்வாகிகளை மாற்றுவது பலவீனம்.

பாமக
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கிளைகள்.! வன்னியர்கள் மட்டும் தொண்டர்கள்..!

காங்கிரஸ்
தொண்டர்களை விட தலைவர்களே அதிகம் ..! எல்லா ஊர்களிலும் கிளைகள் கிடையாது..! இவர்கள் தனித்து ஒரு தேர்தலையாவது சந்திக்க வேண்டும் அப்போதுதான் இவர்கள் பலம் நமக்கு தெரியும்..! அவர்களுக்கும் புரியும்..!

விடுதலை சிறுத்தைகள்
இவர்கள் கருத்துகள் பொதுவானதாக இருந்தாலும் . தலித் கட்சியாக காட்டிகொண்டு ஒரு மினிமம் கியாரண்டி அடைந்து உள்ளனர். எல்லா ஊர்களிலும் கிளைகள் கிடையாது.
கம்யூனிஸ்ட்
பெரும் பலம் இல்லாவிடாலும் கட்சியினர் உறுதியானவர்கள். எல்லா ஊர்களிலும் கிளைகள் இல்லை..!

 
தேதிமுக
விஜயகாந்தின் சினிமா கவர்ச்சியில் துவங்கி சராசரி கட்சியாக வளருகிறது.!
கிட்ட தட்ட எல்லா ஊர்களிலும் கிளைகள் உண்டு..! இவர்கள் எதிர்காலத்தை குறைத்து மதிப்பிட முடியாது..!
மதிமுக

திமுக, அதிமுகவிற்க்கு அடுத்த படியாக அனைத்து சிறிய ஊர்களிளும் கிளைகள் உண்டு. மிக சிறிய கிராமத்திலும் மதிமுக ஆட்கள் உண்டு. வலிமையான கட்சி கட்டமைப்பு இதன் பலம். எதிராளிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்காதது இதன் பலவீனம்.
.........................................................................................

இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் வைகோவை போன்ற ஆற்றல் படைத்த தலைவர் யாரும் இல்லை என நிச்சயமாய் சொல்ல முடியும். அவர் தமிழக அரசியலில் ஒரு சிறப்பான இடத்திற்க்கு இன்னும் வராமல் இருப்பது வைகோவின் துரதிஷ்ட்டம் அல்ல தமிழ் மக்களின் துரதிஷ்ட்டம்...!


இறுதியாக ஒன்று..!
வைகோவிடம் இருந்து நிர்பந்தம் காரணமாக பிரிந்து வேறுகட்சிகளில் இருந்தாலும் (செஞ்சி,எல்.கணேசன் போன்றவர் அல்ல) அவர்கள் மனதில் வைகோ ஒருவரே தலைவராக இருக்கிறார் . அவர்களை வைகோ மீட்க வேண்டும் அது வைகோவால் முடியும்..! வைகோவால் மட்டுமே முடியும். திமுகவின் குடும்ப அரசியலும், வரும் பொதுதேர்தல் முடிவுகளும் மதிமுகவை எதிர்காலத்தில் வலிமை மிக்க சக்தியாய் மாற்றி அமைக்கும்...!--