Thursday, March 31, 2011

பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடித்தாக ஆதாரம் இல்லை கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ


கன்னியாகுமரி : பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கன்னியாகுமரியில் வைகோ கூறினார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சி நேற்று மாலை கன்னியாகுமரியில் நடந்தது. நேற்று மாலை அண்ணாதுரை சிலை முன்பு இருந்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன், இலங்கை கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. வைகோ அஸ்தி கலசத்தை எடுத்து வர ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவியபடி வந்தனர். முக்கடல் சங்கமத்தில் பழ நெடுமாறன் தலைமையில் வைகோ அஸ்தியை கரைத்தார்.

பின்னர் கடற்கரையில் நடந்த அமைதி கூட்டத்தில் வைகோ பேசியதாவது;- உலகின் புகழ் பெற்ற கன்னியாகுமரி கடற்கரையின் கடல் அலையின் ஓசை இதே கடலின் மறு பக்கமான வெல்வெட்டி துறையில் எதிரொலிக்கும். உலகில் இதுவரை கண்டிராத ஆயுத போராட்டத்தை நடத்தியவர் பிரபாகரன். அவரது தாயார் பார்வதியம்மாள் சாம்பலை 31ம் நாளான கடந்த 22ம் தேதி மெரினா கடலில் தூவினோம். சிங்கள ராணுவம் பார்வதியம்மாள் இறுதி காலத்தில் கூட நிம்மதியாக சாக விடாமல் அலை கழித்து அந்த துயரத்தில் இறந்து போனார். சிதையில் கூட சிங்கள ராணுவம் மூன்று நாய்களை சுட்டு கொன்று அந்த பிணத்தை வீசியது. இதைவிட தமிழனுக்கு என்ன அவமானம் வேண்டும். இலங்கை போரில் கடைபிடிக்க வேண்டிய ஜெனிவா ஒப்பந்தத்தை கூட ராணுவம் கடைபிடிக்கவில்லை. ஆனால் பிரபாகரன் கடைபிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறனுக்கு ஈழ தமிழர் ஒருவர் விக்லிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலை தெரிவித்தார் . இதில் சிங்கள ராணுவம் பிரபாகரனை பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது. ராஜபட்ஷே போர்குற்றவாளிஎன அறிவிக்க சர்வதேச கோர்ட்டில் வாதாடுவோம். இதற்காக போரடுவோம். பொதுமக்களை ஒன்று திரட்டுவோம். தமிழ்ஈழ போராட்டம் விரைவில் துவங்கும். இதற்காக லட்சகணக்கான இளைஞர்கள் கடல் தாண்டி செல்லும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை சாராத இளைஞர்கள், மாணவர்களை ஒன்று திரட்டுவோம். இவ்வாறு வைகோ கூறினார்.

 நிகழ்ச்சியில் ம.தி.மு.க, கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில்சம்பத், அவைதலைவர் துரைசாமி, கணேசமூர்த்தி எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் துரைபாலகிருஷ்ணன், மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜோயல், தில்லைசெல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினராஜ், கலிங்கப்பட்டி பஞ்., தலைவர் ரவிசந்திரன் உள்ளிட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ம.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment