சென்னை, ஏப்.8,2011
பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டத்தைத் தர்மயுத்தமாகவே தொடர்வோம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி நகரத்தை அடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் அமைத்து உள் நாசகார நச்சு ஆலையான தாமிர உருக்கு ஆலை நிலம், நீர், காற்று அனைத்தையும் நச்சுத்தன்மை உடையதாக்கி, விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் அனைவரின் வாழ்வையும் பாழாக்கி, உயிருக்கே ஊறு விளைவிக்கும் நோய்களையும் ஏற்படுத்துவதோடு, வேளாண் விவசாய நிலங்களையும் பாழ்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் என்பதால் இந்த ஆலை அகற்றப்பட வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக ம.தி.மு.க போராடி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நானே வாதாடினேன். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தற்காலிகமாக தடை ஆணையும் பெற்றது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நானே வழக்கு தொடுத்து வாதாடினேன்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எந்த அளவில் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி நாக்பூரில் உள்ள மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல், பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (நீரி) உத்தரவிட்டது. வழக்கு தொடுத்தவன் என்ற முறையில் நானும் மத்திய அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பங்கேற்கும் விதத்தில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், 8 வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் அந்த ஆய்வு அறிக்கை தரப்பட வேண்டும் எனவும், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 40வது நாளில்தான் நீரி நிறுவனம் ஆய்வு நடத்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று வருகை தந்தது. நீரியின் சார்பில் டி.நந்தி தலைமையில், டி.ஜி.காஜ்காட்டே, ஏ.என்.வைத்யா, ஏ.டி.பனார்க்கர், எம்.பி.பாட்டீல், கார்த்திக், ஆர்.சிவகுமார் ஆகிய ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வினை மேற்கொண்டனர். நிபுணர் குழுவினரும், மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் 6ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையின் ஆய்வினைத் தொடங்க முனைந்தனர்.
இந்த ஆய்வில் பங்கேற்கச் சென்ற என்னை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், என்னுடன் வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடுமையாக வாதாடியது. உச்ச நீதிமன்றத்தில் வாதாடும்போதே உதவி செய்வதற்கு வழக்கறிஞர்கள் உடன் இருப்பதைப் போல, இந்த ஆய்வில் எனக்கு உதவுவதற்காக என்னுடன் 4 பேரை அனுமதிக்க வேண்டும் என்று நீரி நிபுணர் குழுவினரிடம் நான் வற்புறுத்தியதின்பேரில் சுற்றுச்சூழல் நிபுணரான நித்தியானந்தன் ஜெயராமும், ம.தி.மு.க. சட்டத்துறை செயலர் வழக்கறிஞர் தேவதாஸ், தராசு மகாராசன், ஜாக்சன் தாமஸ் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆய்வின்போது ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்று வட்டாரத்திலும், நிலத்தின் மீதும், நிலத்தின் அடியிலும் உள்ள நீரையோ, மண்ணையோ சோதிப்பதற்கு மாதிரிகளை எடுக்கப் போவதில்லை என்றும், இனி ஒருமுறை வந்துதான் சோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்படும் என்று நீரி நிபுணர் குழு தெரிவித்தபோது நான் கடுமையாக ஆட்சேபித்தேன். உச்ச நீதிமன்றம் அறிவித்த 10 நாட்களுக்குள் நீங்கள் வந்து இருக்க வேண்டும். ஆனால், 40 நாள் கழித்து வந்து இருக்கிறீர்கள். இதற்குள் ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு ஏமாற்று வேலைகளை இங்கே செய்து இருக்கின்றது.
மேலும் பல உண்மைகளை மூடி மறைக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு வாய்ப்பு அளிக்க நீங்கள் முயல்கிறீர்கள். எனவே, வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த ஆய்வில் நான் கலந்து கொள்ள மாட்டேன். இதனை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்பேன் எனக் கூறினேன். இதன் பின் நீரி நிபுணர் குழு நீரையும், மண்ணையும் சோதனைக்கு மாதிரி எடுக்க ஒப்புக் கொண்டது. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குள் நீரையும், மண்ணையும் சோதிப்பதற்கு நாங்களும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றபோது ஸ்டெர்லைட் நிர்வாகம் அடியோடு மறுத்ததால் நீரி நிபுணர் குழு எங்களை அனுமதிக்கவில்லை.
காற்று மண்டலம் மாசுபடுவதைச் சோதிக்கும் உபகரணங்களையும் கொண்டு வரவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும், அடுத்தமுறை வரும்போது அதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிபுணர் குழுவினர் சொன்னார்கள். ஆனால், உண்மையில் காற்றில் கலக்கும் நச்சுத்தன்மையைக் கண்டு அறியும் உபகரணங்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குள் ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இருந்தது. பகல் 12 மணியளவில் அந்த வாகனம் வெளியில் அனுப்பப்பட்டுவிட்டது.
நெருப்பாகக் தகிக்கும் வெயிலில் பகல் 12 மணிக்கு ஆய்வு தொடங்கியது. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குள் பிற்பகல் 3 மணி வரை ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் 4 மணிக்கு ஆய்வு மீண்டும் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளியில் உள்ள இடங்களான தெற்கு வீரபாண்டியாபுரம், மீளவிட்டான், சில்வர்புரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீரும், கிணற்கு நீரும் ஆய்வுக்குச் சோனைக் குடுவைகளில் சேகரிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் நச்சு ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் தங்கள் தரப்பு கருத்துகளைக் கூற ஸ்டெர்லைட் ஆலையின் வாசலுக்கு எதிரே காத்து இருப்பதாகவும், அவர்களையும் சந்திக்க வேண்டும் என நான் வற்புறுத்தியதின்பேரில் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு சந்திப்பதாக நிபுணர் குழு தெரிவித்து இருந்தது. 7ஆம் தேதி காலையில் 9.50 மணிக்கு பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் விவசாயிகளும், மீனவர்களும், கிராமத்துத் தாய்மார்களும் திரண்டு இருந்தனர். ஆனால் 11.15 மணி வரையிலும் நீரி நிபுணர் குழு அங்கு வரவில்லை. இதற்கு இடையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்களுக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூற, ஆலையில் வேலை பார்க்கிற நபர்களை கொண்டு சில ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தது.
அவர்களும் ஆலையின் வாசலுக்கு எதிர்புரம் ஒரு ஓரமாக நின்று இருந்தார்கள். 11.15 மணிக்கு வருகை தந்த நீரி நிபுணர் குழு தலைவர் நந்தி கில்பர்ன் கெமிக்கல் ஆலையிலும், ரமேஷ் பிளவர் ஆலையிலும் ஆய்வு செய்து விட்டு வந்ததாகவும் அதனால் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு இடங்களிலும் ஆய்வு நடத்துவதை எனக்கு ஏன் நீங்கள் தகவல் தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் உரிய விளக்கம் தராமல் வருத்தம் தெரிவித்தனர்.
பின்னர் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் முன் நின்ற மக்களிடம் கருத்துக் கேட்குமாறு நான் கூறியதை ஏற்றுக் கொண்டு, தாய்மார்களிடம் நிபுணர் குழு கருத்து கேட்டது. குடிதண்ணீர் அடியோடு தங்கள் பகுதியில் கெட்டுப் போய்விட்டது என்றும், ஓடைகளில் தண்ணீர் குடிக்கும் ஆடுகள் தொடர்ந்து உயிர் இழந்தன எனவும், தோல் நோய்களும், வேறு பல நோய்களும் தங்களைப் பாதிப்பதையும், விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்கள்.
ஆலைக்கு ஆதரவாக கருத்து கூற வந்தவர்களிடமும் கருத்துகளை கேட்க வேண்டும் எனவும் நிபுணர் குழுவிடம் நான் சொன்னேன். பின்னர் நிபுணர் குழு அங்கு சென்று கருத்துகளை கேட்டது. பகல் 12 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரையிலும் நடைபெற்றது. நீரும், சேறும், மண்ணும் சோதனைக்காக மாதிரிக் குடுவைகளில் சேகரிக்கப்பட்டது. ஆய்வு 3வது நாளாக ஏப்ரல் 8ஆம் தேதி அன்றும் முற்பகலில் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது ஆய்வில் உள்ள குறைபாடுகளை எழுத்து மூலமாகவே நிபுணர் குழுவினரிடம் தந்து உள்ளேன். இந்த ஆய்வின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் மோகன்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் கனகராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
நாக்பூர் நீரி நிறுவனம் 1998ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் நாசம் விளைவிக்கும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. நிலைகுலையர் நேர்மையாளர் டாக்டர் கண்ணா நிறுவனத்தின் ஆணையராக இருந்தார். 1999ஆம் ஆண்டில் நீரி நிறுவனம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு வளைந்து கொடுத்தது. 2003 ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்து தன் நம்பகத்தன்மையை இழந்தது.
நாக்பூர் நீரி நிறுவனம் 1998ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் நாசம் விளைவிக்கும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. நிலைகுலையர் நேர்மையாளர் டாக்டர் கண்ணா நிறுவனத்தின் ஆணையராக இருந்தார். 1999ஆம் ஆண்டில் நீரி நிறுவனம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு வளைந்து கொடுத்தது. 2003 ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்து தன் நம்பகத்தன்மையை இழந்தது.
ஆனால், மீண்டும் 2005ஆம் ஆண்டில் முன்பு கொடுத்த ஆய்வு அறிக்கைக்கு முரண்பட்டு ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற கருத்துகளையும் கூறியது. இந்தப் பின்னணியில்தான் தற்பொழுதும் நீரி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலத்தில் நிறுவப்பட்டு, பொதுமக்கள், விவசாயிகள் நடத்திய போராட்டதால் அந்த மாநில அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்தது.
1994ஆம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த ஆலை தொடங்கப்பட்டது. போபாலில் ஏற்பட்ட ஆலை விபத்தால் நச்சுவாயு படர்ந்து மனித உயிர்கள் பலியானது போல, ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுத்தன்மையால் கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலங்களும் நாசமாகும். நோய்கள் உயிர்களை அழிக்கும். இந்த ஆலை மூடப்பட்டாலும் இதன் நச்சுத்தன்மை சுற்று வட்டாரத்திலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கவே செய்யும். அமெரிக்காவில் ஒரு தாமிர ஆலை மூடப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும் அந்த வட்டாரத்தில் நச்சுத்தன்மை நீங்கவில்லை என்பது ஒரு அபாய அறிவிப்பு ஆகும்.
இந்த ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனர், உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அகர்வால், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க ஒரிசா மாநிலத்தில் கனிம வளங்களைக் கபளீகரம் செய்து அங்கு வாழும் பழங்குடி மக்கள் ஆயுதம் ஏந்தச் செய்து மாவோயிஸ்டுகளாக மாறக் காரணமானவர். பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டத்தைத் தர்மயுத்தமாகவே நம்பிக்கையுடன் தொடர்வோம்," என்று வைகோ கூறியுள்ளார்.
VIKO is very nice politician and real human being. He always fighting for people not for money.
ReplyDeleteAbraham