Friday, May 20, 2011

ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது: வைகோ ஆவேசம்


திண்டிவனம்: ""ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ம.தி.மு.க., மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி இல்லத் திருமணம் @நற்று நடந்தது. விழாவில் வைகோ பேசியதாவது: சென்னையில், வரும் 28ம் தேதி ம.தி.மு.க., பொதுக் கூட்டம் நடக்கிறது. கூட்டு குடும்பத்தில் எத்தனை கோடி ரூபாய் சேர்த்தாலும், ஒற்றுமை இல்லை என்றால் நிம்மதி இருக்காது. அரசியல் குடும்பங்கள் சிலவற்றில் நிம்மதி இல்லை. இது திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலக்கட்டம். ம.தி.மு.க.,விற்கு மட்டுமல்ல, அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் இது சோதனையான காலக்கட்டம். திராவிட இயக்கங்கள் நசித்து போக முயற்சி நடக்கிறது.

ஆளும் கட்சியை தேர்தலில், மக்கள் தூக்கி எறிந்ததற்கு பல காரணங்கள் உண்டு. ஐந்தாண்டுகள் ம.தி.மு.க., பல போராட்டங்களை நடத்தியது. ஆளும் கட்சிக்கு எதிராக பலமான பிரசாரம் செய்தது. தன்மானத்துடன், சுயமரியாதையுடன் தேர்தல் களத்திலிருந்து விலகி நின்றதை தமிழக மக்கள் சரி என்று கூறினர். எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கி கொண்டு தேர்தலில் நில்லுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். குமுதம், ஆனந்த விகடன், "தினமலர்' வாசகர்கள் கருத்து கணிப்பில், ம.தி.மு.க., முடிவு சரி என்று எப்படி பதிவு செய்தனர். மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் நேர்மையானவர்கள், கொள்கையுடையவர்கள். இவர்கள் வளர்வது நல்லது என, மக்கள் எண்ணுகின்றனர். இதுதான் கட்சிக்கு அடித்தளம். ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது. நமக்கு வர வேண்டிய சோதனைகள் எல்லாம் வந்து சென்று விட்டன. பூஜ்யத்திற்கு கீழே எதுவும் எடுக்க முடியாது. இனி நமக்கு வெற்றி தான். அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் எங்கள் மீது பாசம் வைத்துள்ளனர். தமிழகத்தை காக்க ம.தி.மு.க., எல்லா வகையிலும் போராடும். இவ்வாறு வைகோ பேசினார்.

நன்றி..தினமலர்

Monday, May 2, 2011

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!

பொங்கித் தீர்த்த வைகோ

சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​ கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.


அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.

இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.

ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும்,  தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!

- தி.கோபிவிஜய்.. ஜூனியர் விகடனுக்காக.
படம்:   அ.ரஞ்சித்

நன்றி... ஜூனியர் விகடன்