Tuesday, March 29, 2011

அன்னை பார்வதியின் ஈமச்சாம்பல் குமரி கடலில் கரைப்பு! வைகோ, பழ.நெடுமாறன் பங்கேற்பு!


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் ஈமச்சாம்பலை கன்னியாகுமரி கடலில் கரைக்கும் நிகழ்ச்சி மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசின் கொடிய அடக்குமுறைக்கும், இனக்கொலைக்கும் ஆளாக்கப்பட்டு, அடிமை நுகத்தடியைச் சுமக்க நேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகத்தை, சுதந்திரத் தமிழ் ஈழ தேசமாக அமைத்திட, உலகமே அதிசயிக்கும் விதத்தில் விடுதலைப் போர் நடத்திய மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைப் பெற்ற அருமை அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார்.

வல்வெட்டித்துறையில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ள நமது அன்னையின் ஈமச்சாம்பலை, மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரி முனையில், கடல் அலைகளில் தூவி, நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, அன்னையார் மறைந்த 40ஆம் நாளாகிய மார்ச் 31 வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது. நானும், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கு ஏற்க இருக்கின்றோம்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப்பொதுச்செயலாளர்கள், நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளை, குமரி மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம் அவர்களும், கழக நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

கழகக் கண்மணிகளும், தமிழ் ஈழ ஆதரவாளர்களும் பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment